12.150 மூர்த்தி நாயனார் புராணம் ( ) |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12.150  
மூர்த்தி நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
சீர்மன்னு செல்வக் குடிமல்கு சிறப்பின் ஓங்கும் கார்மன்னு சென்னிக் கதிர்மாமணி மாட வைப்பு நார்மன்னு சிந்தைப் பலநற்றுறை மாந்தர் போற்றும் பார்மன்னு தொன்மைப் புகழ்பூண்டது பாண்டி நாடு.
| [1] |
சாயுந் தளிர்வல்லி மருங்குல் நெடுந்த டங்கண் வேயும் படுதோளியர் பண்படும் இன்சொற் செய்ய வாயும் படும்நீள்கரை மண்பொரும் தண்பொ ருந்தம் பாயுங் கடலும்படும் நீர்மை பணித்த முத்தம்.
| [2] |
மொய்வைத்த வண்டின் செறிசூழல் முரன்ற சந்தின் மைவைத்த சோலை மலையந்தர வந்த மந்த மெய்வைத்த காலும் தரும்ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத்தமி ழுந்தருஞ் செவ்வி மணஞ்செய் ஈரம்.
| [3] |
சூழுமிதழ்ப் பங்கய மாகஅத் தோட்டின் மேலாள் தாழ்வின்றி யென்றுந் தனிவாழ்வதத் தையல் ஒப்பார் யாழின் மொழியிற் குழலின்னிசை யுஞ்சு ரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்ப தாகும்.
| [4] |
சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய அங்கண் மூதூர் நூல்பா யிடத்தும் உளநோன்றலை மேதி பாயப் பால்பாய் முலைதோய் மதுப்பங்கயம் பாய எங்கும் சேல்பாய் தடத்தும் உளசெய்யுள்மிக் கேறு சங்கம்.
| [5] |
மந்தாநிலம் வந்தசை பந்தரின் மாட முன்றில் பந்தாடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்தார்முலை மேலன தாழ்குழை வாள்மு கப்பொற் செந்தாமரை மேலன நித்திலம் சேர்ந்த கோவை.
| [6] |
மும்மைப் புவனங்களின் மிக்கதன் றேஅம் மூதூர் மெய்ம்மைப் பொருளாந் தமிழ்நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளுந் தருவார்திரு வால வாயில் எம்மைப் பவந்தீர்ப் பவர்சங்கம் இருந்த தென்றால்.
| [7] |
அப்பொற் பதிவாழ் வணிகர்குலத் தான்ற தொன்மைச் செப்பத் தகுசீர்க் குடிசெய்தவம் செய்ய வந்தார் எப்பற் றினையும்அறுத் தேறுகைத் தேறு வார்தாள் மெய்ப்பற் றெனப்பற்றி விடாத விருப்பின் மிக்கார்.
| [8] |
நாளும் பெருங்கா தல்நயப்புறும் வேட்கை யாலே கேளுந் துணையும் முதற்கேடில் பதங்க ளெல்லாம் ஆளும் பெருமான் அடித்தாமரை அல்ல தில்லார் மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார் மூர்த்தி யார்தாம்.
| [9] |
அந்திப் பிறைசெஞ் சடைமேல்அணி ஆல வாயில் எந்தைக் கணிசந் தனக்காப்பிடை என்றும் முட்டா அந்தச் செயலி னிலைநின்றடி யாரு வப்பச் சிந்தைக் கினிதாய திருப்பணி செய்யும் நாளில்.
| [10] |
கானக் கடிசூழ் வடுகக்கரு நாடர் காவன் மானப் படைமன்னன் வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திண்தேர் சேனைக் கடலும் கொடுதென்றிசை நோக்கி வந்தான்.
| [11] |
வந்துற்ற பெரும்படை மண்புதை யப்ப ரப்பிச் சந்தப் பொதியில்தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செருவென்று தன்னாணை செலுத்து மாற்றால் கந்தப் பொழில்சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.
| [12] |
வல்லாண் மையின்வண் டமிழ்நாடு வளம்ப டுத்து நில்லா நிலையொன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமைத் திறமேவிய நீற்றின் சார்பு செல்லா தருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்.
| [13] |
தாழுஞ் சமண்கையர் தவத்தைமெய் யென்று சார்ந்து வீழுங் கொடியோன் அதுவன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால் அரவஞ்சுடர்த் திங்க ளோடும் வாழுஞ் சடையா னடியாரையும் வன்மை செய்வான்.
| [14] |
செக்கர்ச் சடையார் விடையார்திரு வால வாயுள் முக்கட் பரனார் திருத்தொண்டரை மூர்த்தி யாரை மைக்கற் புரைநெஞ் சுடைவஞ்சகன் வெஞ்ச மண்பேர் எக்கர்க் குடனாக இகழ்ந்தன செய்ய எண்ணி.
| [15] |
அந்தம் இலவாம் மிறைசெய்யவும் அன்ப னார்தாம் முந்தைம் முறைமைப் பணிமுட்டலர் செய்து வந்தார் தந்தம் பெருமைக் களவாகிய சார்பில் நிற்கும் எந்தம் பெருமக் களையாவர் தடுக்க வல்லார்.
| [16] |
எள்ளுஞ்செயல் வன்மைகள் எல்லையில் லாத செய்யத் தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளுந்துறை யும்அடைத் தான்கொடுங் கோன்மை செய்வான் தெள்ளும்புனல் வேணியர்க் கன்பரும் சிந்தை நொந்து.
| [17] |
புன்மைச் செயல்வல் அமண்குண்டரிற் போது போக்கும் வன்மைக் கொடும்பா தகன்மாய்ந்திட வாய்மை வேத நன்மைத் திருநீற் றுயர்நன்னெறி தாங்கு மேன்மைத் தன்மைப் புவிமன் னரைச்சார்வதென் றென்று சார்வார்.
| [18] |
காய்வுற்ற செற்றங்கொடு கண்டகன் காப்ப வுஞ்சென் றாய்வுற்ற கொட்பிற் பகலெல்லை அடங்க நாடி ஏய்வுற்ற நற்சந் தனமெங்கும் பெறாது சிந்தை சாய்வுற்றிட வந்தனர் தம்பிரான் கோயில் தன்னில்.
| [19] |
நட்டம்புரி வார்அணி நற்றிரு மெய்ப்பூச் சின்று முட்டும்பரி சாயினுந் தேய்க்குங்கை முட்டா தென்று வட்டந்திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார் கட்டும்புறந் தோல்நரம் பென்பு கரைந்து தேய.
| [20] |
கல்லின்புறந் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும்பரப் பெங்கணும் என்பு திறந்து மூளை புல்லும்படி கண்டு பொறுத்திலர் தம்பி ரானார் அல்லின்கண் எழுந்த துவந்தருள் செய்த வாக்கு.
| [21] |
அன்பின்துணி வால்இது செய்திடல் ஐய உன்பால் வன்புன்கண் விளைத்தவன் கொண்டமண் எல்லாங் கொண்டு முன்பின்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் பின்புன்பணி செய்துநம் பேருல கெய்து கென்ன.
| [22] |
இவ்வண்ணம் எழுந்தது கேட்டெழுந் தஞ்சி முன்பு செய்வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்தபுண் ஊறு தீர்ந்து கைவண்ணம் நிரம்பின வாசமெல் லாங்க லந்து மொய்வண்ண விளங்கொளி எய்தினர் மூர்த்தி யார்தாம்.
| [23] |
அந்நாள்இர வின்கண் அமண்புகல் சார்ந்து வாழும் மன்னாகிய போர்வடு கக்கரு நாடர் மன்னன் தன்னாளும் முடிந்தது சங்கரன் சார்பி லோர்க்கு மின்னாமென நீடிய மெய்ந்நிலை யாமை வெல்ல.
| [24] |
இவ்வா றுலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் மெய்வா ழுலகத்து விரைந்தணை வார்க ளேபோல் அவ்வா றரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத் திடைவீழ விரைந்து வீந்தான்.
| [25] |
முழுதும் பழுதே புரிமூர்க்கன் உலந்த போதின் எழுதுங் கொடிபோல் பவருட்பட ஏங்கு சுற்றம் முழுதும் புலர்வுற் றதுமற்றவன் அன்ன மாலைப் பொழுதும் புலர்வுற் றதுசெங்கதிர் மீது போத.
| [26] |
அவ்வேளையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் கைவேறுகொள் ஈம வருங்கடன் காலை முற்றி வைவேலவன் தன்குல மைந்தரும் இன்மை யாலே செய்வேறு வினைத்திறஞ் சிந்தனை செய்து தேர்வார்.
| [27] |
தாழுஞ் செயலின் றொருமன்னவன் தாங்க வேண்டும் கூழுங் குடியும் முதலாயின கொள்கைத் தேனும் சூழும் படைமன் னவன்தோளிணைக் காவ லின்றி வாழுந் தகைத்தன் றிந்தவையகம் என்று சொன்னார்.
| [28] |
பன்முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலங் காப்பான் தன்னெடுங் குடைக்கீழ்த் தத்தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை யின்றி வைகும் மண்ணுல கெண்ணுங் காலை இன்னுயி ரின்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்.
| [29] |
இவ்வகை பலவும் எண்ணி இங்கினி அரசர் இல்லை செய்வகை யிதுவே யென்று தெளிபவர் சிறப்பின் மிக்க மைவரை யனைய வேழங் கண்கட்டி விட்டால் மற்றக் கைவரை கைக்கொண் டார்மண் காவல்கைக் கொள்வார் என்று.
| [30] |
செம்மாண்வினை யர்ச்சனை நூன்முறை செய்து தோளால் இம்மாநிலம் ஏந்தஒர் ஏந்தலை யேந்து கென்று பெய்ம்மாமுகில் போன்மதம் பாய்பெரு கோடை நெற்றிக் கைம்மாவை நறுந்துகில் கொண்டுகண் கட்டி விட்டார்.
| [31] |
கண்கட்டி விடுங்களி யானைஅக் காவல் மூதூர் மண்கொட்புற வீதி மருங்கு திரிந்து போகித் திண்பொற்றட மாமதில் சூழ்திரு வால வாயின் விண்பிற்பட வோங்கிய கோபுரம் முன்பு மேவி.
| [32] |
நீங்கும்இர வின்கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர் ஈங்கெம்பெரு மான்அரு ளாம்எனில் இந்த வையம் தாங்குஞ்செயல் பூண்பன்என் றுள்ளம் தளர்வு நீங்கிப் பூங்கொன்றை மிலைந்தவர் கோயிற் புறத்தின் நிற்ப.
| [33] |
வேழத் தரசங்கண் விரைந்து நடந்து சென்று வாழ்வுற் றுலகஞ்செய் தவத்தினின் வள்ள லாரைச் சூழ்பொற் சுடர்மாமணி மாநிலந் தோய முன்பு தாழ்வுற் றெடுத்துப் பிடர்மீது தரித்த தன்றே.
| [34] |
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா ஏதங்கெட எண்ணிய திண்மை அமைச்ச ரெல்லாம் பாதங்களின் மீது பணிந்தெழுந் தார்கள் அப்போ தோதங்கிளர் வேலையை ஒத்தொலி மிக்க தவ்வூர்.
| [35] |
சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் எங்கெங்கும் இயம்பின பல்லியம் எல்லை யில்ல அங்கங்கு மலிந்தன வாழ்த்தொலி அம்பொற் கொம்பின் பங்கன்அரு ளால்உல காள்பவர் பாங்கர் எங்கும்.
| [36] |
வெங்கட்களிற் றின்மிசை நின்றும் இழிச்சி வேரித் தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலை அங்கட்கொடு புக்கரி யாசனத் தேற்றி ஒற்றைத் திங்கட்குடைக் கீழ்உரி மைச்செயல் சூழ்ந்து செய்வார்.
| [37] |
மன்னுந் திசைவேதியில் மங்கல ஆகு திக்கண் துன்னுஞ் சுடர்வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூநீர் உன்னும் செயல்மந் திரயோகர் நிறுத்தி னார்கள்.
| [38] |
வந்துற்றெழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் சிந்தைச்சிவ மேதெளி யுந்திரு மூர்த்தி யார்தாம் முந்தைச்செய லாம்அமண் போய்முதற் சைவ மோங்கில் இந்தப்புவி தாங்கிஇவ் வின்னர சாள்வ னென்றார்.
| [39] |
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்ச ரோடு மெய்வாழ்தரு நூலறி வின்மிகு மாந்தர் தாமும் எவ்வாறருள் செய்தனை மற்றவை யன்றி யாவர் செய்வார் பெரியோய் எனச்சேவடி தாழ்ந்து செப்ப.
| [40] |
வையம் முறைசெய் குவனாகில் வயங்கு நீறே செய்யும் அபிடே கமுமாக செழுங்க லன்கள் ஐயன் அடையா ளமுமாக அணிந்து தாங்கும் மொய்புன் சடைமா முடியேமுடி யாவ தென்றார்.
| [41] |
என்றிவ்வுரை கேட்டலும் எல்லையில் கல்வி யோரும் வன்திண்மதி நூல்வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்றிங்கருள் தானென நற்றவ வேந்தர் சிந்தை ஒன்றும்அர சாள்உரி மைச்செய லான உய்த்தார்.
| [42] |
மாடெங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் சூடுஞ்சடை மௌலி யணிந்தவர் தொல்லை ஏனம் தேடுங்கழ லார்திரு வாலவாய் சென்று தாழ்ந்து நீடுங்களிற் றின்மிசை நீள்மறு கூடு போந்தார்.
| [43] |
மின்னும்மணி மாளிகை வாயிலின் வேழ மீது தன்னின்றும் இழிந்து தயங்கொளி மண்ட பத்திற் பொன்னின்அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால் மன்னுங்குடை நீழல் இருந்தனர் வையந் தாங்கி.
| [44] |
குலவுந்துறை நீதி யமைச்சர் குறிப்பின் வைகக் கலகஞ்செய் அமண்செய லாயின கட்டு நீங்கி நிலவுந்திரு நீற்று நெறித்துறை நீடு வாழ உலகெங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன.
| [45] |
நுதலின்கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் பதமெங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற உதவுந்திரு நீறுயர் கண்டிகை கொண்ட வேணி முதன்மும்மையி னால்உல காண்டனர் மூர்த்தி யார்தாம்.
| [46] |
ஏலங்கமழ் கோதையர் தந்திறம் என்றும் நீங்குஞ் சீலங்கொடு வெம்புலன் தெவ்வுடன் வென்று நீக்கி ஞாலந்தனி நேமி நடாத்தி நலங்கொள் ஊழிக் காலம்உயிர் கட்கிட ரான கடிந்து காத்து.
| [47] |
பாதம்பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற ஏதம்பிணி யாவகை இவ்வுல காண்டு தொண்டின் பேதம்புரி யாஅருட் பேரர சாளப் பெற்று நாதன்கழற் சேவடி நண்ணினர் அண்ண லாரே.
| [48] |
அகல்பாறையின் வைத்து முழங்கையை அன்று தேய்த்த இகலார்களிற் றன்பரை யேத்தி முருக னாராம் முகில்சூழ்நறுஞ் சோலையின் மொய்யொளி மாட வீதிப் புகலூர்வரும் அந்தணர் தந்திறம் போற்ற லுற்றாம்.
| [49] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12.160  
முருக நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
தாது சூழுங் குழல்மலையாள் தளிர்க்கை சூழுந் திருமேனி மீது சூழும் புனற்கற்றை வேணி நம்பர் விரும்புபதி சோதி சூழும் மணிமௌலிச் சோழர் பொன்னித் திருநாட்டுப் போது சூழும் தடஞ்சோலைப் பொய்கை சூழும் பூம்புகலூர்.
| [1] |
நாம மூதூர் மற்றதனுள் நல்லோர் மனம்போல் அவரணிந்த சேம நிலவு திருநீற்றின் சிறந்த வெண்மைத் திருந்தொளியால் யாம இருளும் வெளியாக்கும் இரவே யல்ல விரைமலர்மேற் காமர் மதுவுண் சிறைவண்டுங் களங்க மின்றி விளங்குமால்.
| [2] |
நண்ணும் இசைதேர் மதுகரங்கள் நனைமென் சினையின் மருங்கலைய வண்ண மதுரத் தேன்பொழிவ வாச மலர்வா யேயல்ல தண்ணென் சோலை எம்மருங்கும் சாரும் மடமென் சாரிகையின் பண்ணின் கிளவி மணிவாயும் பதிகச் செழுந்தேன் பொழியுமால்.
| [3] |
வண்டு பாடப் புனல்தடத்து மலர்ந்து கண்ணீர் அரும்புவன கொண்ட வாச முகையவிழ்ந்த குளிர்பங் கயங்க ளேயல்ல அண்டர் பெருமான் திருப்பாட்டின் அமுதம் பெருகச் செவிமடுக்குந் தொண்டர் வதன பங்கயமுந் துளித்த கண்ணீர் அரும்புமால்.
| [4] |
ஆன பெருமை வளஞ்சிறந்த அந்தண் புகலூ ரதுதன்னில் மான மறையோர் குலமரபின் வந்தார் முந்தை மறைமுதல்வர் ஞான வரம்பின் தலைநின்றார் நாகம் புனைவார் சேவடிக்கீழ் ஊன மின்றி நிறையன்பால் உருகு மனத்தார் முருகனார்.
| [5] |
அடைமேல் அலவன் துயிலுணர அலர்செங் கமல வயற்கயல்கள் மடைமே லுகளுந் திருப்புகலூர் மன்னி வாழுந் தன்மையராய் விடைமேல் வருவார்க் காளான மெய்ம்மைத் தவத்தால் அவர்கற்றைச் சடைமேல் அணியத் திருப்பள்ளித் தாமம் பறித்துச் சாத்துவார்.
| [6] |
புலரும் பொழுதின் முன்னெழுந்து புனித நீரில் மூழ்கிப்போய் மலருஞ் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்நீர் ஆறுமதி உலவு மருங்கு முருகுயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன்பறித்த அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூங் கூடை களில்அமைப்பார்.
| [7] |
கோட்டு மலரும் நிலமலரும் குளிர்நீர் மலரும் கொழுங்கொடியின் தோட்டு மலரும் மாமலருஞ் சுருதி மலருந் திருவாயில் காட்டு முறுவல் நிலவலரக் கனக வரையிற் பன்னகநாண் பூட்டும் ஒருவர் திருமுடிமேல் புனைய லாகும் மலர்தெரிந்து.
| [8] |
கொண்டு வந்து தனியிடத்தில் இருந்து கோக்குங் கோவைகளும் இண்டைச் சுருக்கும் தாமமுடன் இணைக்கும் வாச மாலைகளுந் தண்டிற் கட்டுங் கண்ணிகளும் தாளிற் பிணைக்கும் பிணையல்களும் நுண்டா திறைக்குந் தொடையல்களும் சமைத்து நுடங்கு நூன்மார்பர்.
| [9] |
ஆங்கப் பணிகள் ஆனவற்றுக் கமைத்த காலங் களில்அமைத்துத் தாங்கிக் கொடுசென் றன்பினொடுஞ் சாத்தி வாய்ந்த அர்ச்சனைகள் பாங்கிற் புரிந்து பரிந்துள்ளார் பரமர் பதிகப் பற்றான ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தும் ஓவா நாவின் உணர்வினார்.
| [10] |
தள்ளும் முறைமை ஒழிந்திடஇத் தகுதி யொழுகு மறையவர்தாம் தெள்ளு மறைகள் முதலான ஞானஞ் செம்பொன் வள்ளத்தில் அள்ளி அகிலம் ஈன்றளித்த அம்மை முலைப்பால் உடனுண்ட பிள்ளை யார்க்கு நண்பருமாம் பெருமை யுடையா ராயினார்.
| [11] |
அன்ன வடிவும் ஏனமுமாய் அறிவான் இருவர் அறியாமே மன்னும் புகலூர் உறைவாரை வர்த்த மான வீச்சுரத்து நன்னர் மகிழ்ச்சி மனங்கொள்ள நாளும் பூசை வழுவாமே பன்னும் பெருமை அஞ்செழுத்தும் பயின்றே பணிந்து பரவினார்.
| [12] |
அங்கண் அமருந் திருமுருகர் அழகார் புகலிப் பிள்ளையார் பொங்கு மணத்தின் முன்செய்த பூசை அதனாற் புக்கருளிச் செங்கண் அடலே றுடையவர்தாஞ் சிறந்த அருளின் பொருளளிக்கத் தங்கள் பெருமான் அடிநீழற் தலையாம் நிலைமை சார்வுற்றார்.
| [13] |
அரவம் அணிந்த அரையாரை அருச்சித் தவர்தங் கழல்நிழற்கீழ் விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம்போற்றிக் கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்தி ரங்கொண்டு பரவு மன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர்வுற்றேன்.
| [14] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12.170  
உருத்திர பசுபதி நாயனார்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நிலத்தின் ஓங்கிய நிவந்தெழும் பெரும்புனல் நீத்தம் மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாட்டுக் குலத்தி னோங்கிய குறைவிலா நிறைகுடி குழுமித் தலத்தின் மேம்படு நலத்தது பெருந்திருத் தலையூர்.
| [1] |
வான்அ ளிப்பன மறையவர் வேள்வியின் வளர்தீ தேன்அ ளிப்பன நறுமலர் செறிசெழுஞ் சோலை ஆன்அ ளிப்பன அஞ்சுகந் தாடுவார்க் கவ்வூர் தான்அ ளிப்பன தருமமும் நீதியுஞ் சால்பும்.
| [2] |
அங்கண் மாநகர் அதனிடை அருமறை வாய்மைத் துங்க வேதியர் குலத்தினில் தோன்றிய தூயோர் செங்கண் மால்விடை யார்செழும் பொன்மலை வல்லி பங்க னார்அடி மைத்திறம் புரிபசு பதியார்.
| [3] |
ஆய அந்தணர் அருமறை உருத்திரங் கொண்டு மாய னார்அறி யாமலர்ச் சேவடி வழுத்தும் தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சின ராகிஅத் தொழில்தலை நின்றார்.
| [4] |
கரையில் கம்பலை புள்ளொலி கறங்கிட மருங்கு பிரச மென்சுரும் பறைந்திடக் கருவரால் பிறழும் நிரைநெ டுங்கயல் நீரிடை நெருப்பெழுந் தனைய விரைநெ கிழ்ந்தசெங் கமலமென் பொய்கையுள் மேவி.
| [5] |
தெள்ளு தண்புனல் கழுத்தள வாயிடைச் செறிய உள்ளு றப்புக்கு நின்றுகை யுச்சிமேல் குவித்துத் தள்ளு வெண்டிரைக் கங்கைநீர் ததும்பிய சடையார் கொள்ளு மன்பினி லுருத்திரங் குறிப்பொடு பயின்றார்.
| [6] |
அரும றைப்பய னாகிய உருத்திர மதனை வருமு றைப்பெரும் பகலும்எல் லியும்வழு வாமே திரும லர்ப்பொகுட் டிருந்தவன் அனையவர் சிலநாள் ஒருமை உய்த்திட உமையிடம் மகிழ்ந்தவர் உவந்தார்.
| [7] |
காதல் அன்பர்தம் அருந்தவப் பெருமையுங் கலந்த வேத மந்திர நியதியின் மிகுதியும் விரும்பி ஆதி நாயகர் அமர்ந்தருள் செய்யமற் றவர்தாம் தீதி லாநிலைச் சிவபுரி எல்லையில் சேர்ந்தார்.
| [8] |
நீடும் அன்பினில் உருத்திரம் ஓதிய நிலையால் ஆடு சேவடி அருகுற அணைந்தன ரவர்க்குப் பாடு பெற்றசீர் உருத்திர பசுபதி யாராங் கூடு நாமமும் நிகழ்ந்தது குவலயம் போற்ற.
| [9] |
அயில்கொள் முக்குடு மிப்படை யார்மருங் கருளால் பயில்உ ருத்திர பசுபதி யார்திறம் பரசி எயில்உ டைத்தில்லை யெல்லையில் நாளைப்போ வாராம் செயல்உ டைப்புறத் திருத்தொண்டர் திறத்தினை மொழிவாம்.
| [10] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12.180  
திரு நாளைப் போவர்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பகர்ந்துலகு சீர்போற்றும் பழையவளம் பதியாகுந் திகழ்ந்தபுனல் கொள்ளிடம்பொன் செழுமணிகள் திரைக்கரத்தால் முகந்துதர இருமருங்கும் முளரிமலர்க் கையேற்கும் அகன்பணைநீர் நன்னாட்டு மேற்கானாட் டாதனுர்.
| [1] |
நீற்றலர்பே ரொளிநெருங்கும் அப்பதியில் நிறைகரும்பின் சாற்றலைவன் குலைவயலிற் தகட்டுவரால் எழப்பகட்டேர் ஆற்றலவன் கொழுக்கிழித்த சால்வழிபோய் அசைந்தேறிச் சேற்றலவன் கருவுயிர்க்க முருகுயிர்க்கும் செழுங்கமலம்.
| [2] |
நனைமருவும் சினைபொதுளி நறுவிரைசூழ் செறிதளிரில் தினகரமண் டலம்வருடும் செழுந்தருவின் குலம்பெருகிக் கனமருவி அசைந்தலையக் களிவண்டு புடைசூழப் புனல்மழையோ மதுமழையோ பொழிவொழியா பூஞ்சோலை.
| [3] |
பாளைவிரி மணங்கமழும் பைங்காய்வன் குலைத்தெங்கின் தாளதிர மிசைமுட்டித் தடங்கிடங்கின் எழப்பாய்ந்த வாளைபுதை யச்சொரிந்த பழம்மிதப்ப வண்பலவின் நீளமுதிர் கனிகிழிதேன் நீத்தத்தில் எழுந்துகளும்.
| [4] |
வயல்வளமுஞ் செயல்படுபைந் துடவையிடை வருவளமும் வியலிடம்எங் கணும்நிறைய மிக்கபெருந் திருவினவாம் புயலடையும் மாடங்கள் பொலிவெய்த மலிவுடைத்தாய் அயலிடைவே றடிநெருங்கக் குடிநெருங்கி யுளதவ்வூர்.
| [5] |
மற்றவ்வூர்ப் புறம்பணையின் வயல்மருங்கு பெருங்குலையில் சுற்றம்விரும் பியகிழமைத் தொழிலுழவர் கிளைதுவன்றிப் பற்றியபைங் கொடிச்சுரைமேற் படர்ந்தபழங் கூரையுடைப் புற்குரம்பைச் சிற்றில்பல நிறைந்துளதோர் புலைப்பாடி.
| [6] |
கூருகிர்மெல் லடியளகின் குறும்பார்ப்புக் குழுச்சுழலும் வார்பயில்முன் றிலில்நின்ற வள்ளுகிர்நாய்த் துள்ளுபறழ் காரிரும்பின் சரிசெறிகைக் கருஞ்சிறார் கவர்ந்தோட ஆர்சிறுமென் குரைப்படக்கும் அரைக்கசைத்த இருப்புமணி.
| [7] |
வன்சிறுதோல் மிசையுழத்தி மகவுறக்கும் நிழன்மருதுந் தன்சினைமென் பெடையொடுங்குந் தடங்குழிசிப் புதைநீழல் மென்சினைய வஞ்சிகளும் விசிப்பறைதூங் கினமாவும் புன்றலைநாய்ப் புனிற்றுமுழைப் புடைத்தெங்கும் உடைத்தெங்கும்.
| [8] |
செறிவலித்திண் கடைஞர்வினைச் செயல்புரிவை கறையாமக் குறியளக்க அழைக்குஞ்செங் குடுமிவா ரணச்சேக்கை வெறிமலர்த்தண் சினைக்காஞ்சி விரிநீழல் மருங்கெல்லாம் நெறிகுழற்புன் புலைமகளிர் நெற்குறுபாட் டொலிபரக்கும்.
| [9] |
புள்ளுந்தண் புனற்கலிக்கும் பொய்கையுடைப் புடையெங்கும் தள்ளும்தாள் நடையசையத் தளையவிழ்பூங் குவளைமது விள்ளும்பைங் குழற்கதிர்நெல் மிலைச்சியபுன் புலைச்சியர்கள் கள்ளுண்டு களிதூங்கக் கறங்குபறை யுங்கலிக்கும்.
| [10] |
இப்படித்தா கியகடைஞர் இருப்பின்வரைப் பினின்வாழ்வார் மெய்ப்பரிவு சிவன்கழற்கே விளைத்தஉணர் வொடும்வந்தார் அப்பதியில் ஊர்ப்புலைமை யான்றதொழில் தாயத்தார் ஒப்பிலவர் நந்தனார் எனவொருவர் உளரானார்.
| [11] |
பிறந்துணர்வு தொடங்கியபின் பிறைக்கண்ணிப் பெருத்தகைபால் சிறந்தபெருங் காதலினால் செம்மைபுரி சிந்தையராய் மறந்தும்அயல் நினைவின்றி வருபிறப்பின் வழிவந்த அறம்புரிகொள் கையராயே அடித்தொண்டின் நெறிநின்றார்.
| [12] |
ஊரில்விடும் பறைத்துடவை உணவுரிமை யாக்கொண்டு சார்பில்வருந் தொழில்செய்வார் தலைநின்றார் தொண்டினால் கூரிலைய முக்குடுமிப் படையண்ணல் கோயில்தொறும் பேரிகையே முதலாய முகக்கருவி பிறவினுக்கும்.
| [13] |
போர்வைத்தோல் விசிவார்என் றினையனவும் புகலுமிசை நேர்வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலைவகையில் சேர்வுற்ற தந்திரியும் தேவர்பிரான் அர்ச்சனைகட் கார்வத்தி னுடன்கோரோ சனையும்இவை அளித்துள்ளார்.
| [14] |
இவ்வகையால் தந்தொழிலின் இயன்றவெலாம் எவ்விடத்தும் செய்வனவுங் கோயில்களிற் திருவாயிற் புறநின்று மெய்விரவு பேரன்பு மிகுதியினால் ஆடுதலும் அவ்வியல்பிற் பாடுதலு மாய்நிகழ்வார் அந்நாளில்.
| [15] |
திருப்புன்கூர்ச் சிவலோகன் சேவடிகள் மிகநினைந்து விருப்பினொடுந் தம்பணிகள் வேண்டுவன செய்வதற்கே அருத்தியினால் ஒருப்பட்டங் காதனூர் தனில்நின்றும் வருத்தமுறுங் காதலினால் வந்தவ்வூர் மருங்கணைந்தார்.
| [16] |
சீரேறும் இசைபாடித் திருத்தொண்டர் திருவாயில் நேரேகும் பிடவேண்டும் எனநினைந்தார்க் கதுநேர்வார் காரேறும் எயிற்புன்கூர்க் கண்ணுதலார் திருமுன்பு போரேற்றை விலங்கஅருள் புரிந்தருளிப் புலப்படுத்தார்.
| [17] |
சிவலோகம் உடையவர்தம் திருவாயில் முன்னின்று பவலோகங் கடப்பவர்தம் பணிவிட்டுப் பணிந்தெழுந்து சுவலோடு வாரலையப் போவார்பின் பொருசூழல் அவலோடும் அடுத்ததுகண் டாதரித்துக் குளந்தொட்டார்.
| [18] |
வடங்கொண்ட பொன்னிதழி மணிமுடியார் திருவருளால் தடங்கொண்ட குளத்தளவு சமைத்ததற்பின் தம்பெருமான் இடங்கொண்ட கோயில்புறம் வலங்கொண்டு பணிந்தெழுந்து நடங்கொண்டு விடைகொண்டு தம்பதியில் நண்ணினார்.
| [19] |
இத்தன்மை ஈசர்மகிழ் பதிபலவுஞ் சென்றிறைஞ்சி மெய்த்ததிருத் தொண்டுசெய்து விரவுவார் மிக்கெழுந்த சித்தமொடுந் திருத்தில்லைத் திருமன்று சென்றிறைஞ்ச உய்த்தபெருங் காதலுணர் வொழியாது வந்துதிப்ப.
| [20] |
அன்றிரவு கண்துயிலார் புலர்ந்ததற்பின் அங்கெய்த ஒன்றிஅணை தருதன்மை உறுகுலத்தோ டிசைவில்லை என்றிதுவும் எம்பெருமான் ஏவலெனப் போக்கொழிவார் நன்றுமெழுங் காதல்மிக நாளைப்போ வேன்என்பார்.
| [21] |
நாளைப்போ வேன்என்று நாள்கள்செலத் தரியாது பூளைப்பூ வாம்பிறவிப் பிணிப்பொழியப் போவாராய்ப் பாளைப்பூங் கமுகுடுத்த பழம்பதியி னின்றும்போய் வாளைப்போத் தெழும்பழனம் சூழ்தில்லை மருங்கணைவார்.
| [22] |
செல்கின்ற போழ்தந்தத் திருவெல்லை பணிந்தெழுந்து பல்குஞ்செந் தீவளர்த்த பயில்வேள்வி எழும்புகையும் மல்குபெருங் கிடையோதும் மடங்கள்நெருங் கினவுங்கண் டல்குந்தங் குலம்நினைந்தே அஞ்சியணைந் திலர்நின்றார்.
| [23] |
நின்றவர்அங் கெய்தரிய பெருமையினை நினைப்பார்முன் சென்றிவையுங் கடந்தூர்சூழ் எயில்திருவா யிலைப்புக்கால் குன்றனைய மாளிகைகள் தொறுங்குலவும் வேதிகைகள் ஒன்றியமூ வாயிரம்அங் குளவென்பார் ஆகுதிகள்.
| [24] |
இப்பரிசா யிருக்கவெனக் கெய்தலரி தென்றஞ்சி அப்பதியின் மதிற்புறத்தின் ஆராத பெருங்காதல் ஒப்பரிதாய் வளர்ந்தோங்க உள்ளுருகிக் கைதொழுதே செப்பரிய திருவெல்லை வலங்கொண்டு செல்கின்றார்.
| [25] |
இவ்வண்ணம் இரவுபகல் வலஞ்செய்தங் கெய்தரிய அவ்வண்ணம் நினைந்தழிந்த அடித்தொண்ட ரயர்வெய்தி மைவண்ணத் திருமிடற்றார் மன்றில்நடங் கும்பிடுவ தெவ்வண்ணம் எனநினைந்தே ஏசறவி னொடுந்துயில்வார்.
| [26] |
இன்னல்தரும் இழிபிறவி இதுதடையென் றேதுயில்வார் அந்நிலைமை அம்பலத்துள் ஆடுவார் அறிந்தருளி மன்னுதிருத் தொண்டரவர் வருத்தமெலாந் தீர்ப்பதற்கு முன்னணைந்து கனவின்கண் முறுவலொடும் அருள்செய்வார்.
| [27] |
இப்பிறவி போய்நீங்க எரியினிடை நீமூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன்னணைவாய் எனமொழிந் தப்பரிசே தில்லைவாழ் அந்தணர்க்கும் எரியமைக்க மெய்ப்பொருளா னார்அருளி அம்பலத்தே மேவினார்.
| [28] |
தம்பெருமான் பணிகேட்ட தவமறையோர் எல்லாரும் அம்பலவர் திருவாயில் முன்பச்ச முடன்ஈண்டி எம்பெருமான் அருள்செய்த பணிசெய்வோம் என்றேத்தித் தம்பரிவு பெருகவருந் திருத்தொண்டர் பாற்சார்ந்தார்.
| [29] |
ஐயரே அம்பலவர் அருளால்இப் பொழுதணைந்தோம் வெய்யஅழல் அமைத்துமக்குத் தரவேண்டி எனவிளம்ப நையுமனத் திருத்தொண்டர் நானுய்ந்தேன் எனத்தொழுதார் தெய்வமறை முனிவர்களும் தீயமைத்த படிமொழிந்தார்.
| [30] |
மறையவர்கள் மொழிந்ததற்பின் தென்றிசையின் மதிற்புறத்துப் பிறையுரிஞ்சும் திருவாயில் முன்னாகப் பிஞ்ஞகர்தம் நிறையருளால் மறையவர்கள் நெருப்பமைத்த குழியெய்தி இறையவர்தாள் மனங்கொண்டே எரிசூழ வலங்கொண்டார்.
| [31] |
கைதொழுது நடமாடும் கழலுன்னி அழல்புக்கார் எய்தியஅப் பொழுதின்கண் எரியின்கண் இம்மாயப் பொய்தகையும் உருவொழித்துப் புண்ணியமா முனிவடிவாய் மெய்திகழ்வெண் ணூல்விளங்க வேணிமுடி கொண்டெழுந்தார்.
| [32] |
செந்தீமேல் எழும்பொழுது செம்மலர்மேல் வந்தெழுந்த அந்தணன்போல் தோன்றினார் அந்தரதுந் துபிநாதம் வந்தெழுந்த துயர்விசும்பில் வானவர்கள் மகிழ்ந்தார்த்துப் பைந்துணர்மந் தாரத்தின் பனிமலர்மா ரிகள்பொழிந்தார்.
| [33] |
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார் பரவரிய தொண்டர்களும் பணிந்துமனங் களிபயின்றார் அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல்வணங்க வருகின்றார் திருநாளைப் போவாராம் மறைமுனிவர்.
| [34] |
தில்லைவாழ் அந்தணரும் உடன்செல்லச் சென்றெய்திக் கொல்லைமான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதிறைஞ்சி ஒல்லைபோய் உள்புகுந்தார் உலகுய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்களுங் கண்டிலரால்.
| [35] |
அந்தணர்கள் அதிசயித்தார் அருமுனிவர் துதிசெய்தார் வந்தணைந்த திருத்தொண்டர் தம்மைவினை மாசறுத்துச் சுந்தரத்தா மரைபுரையும் துணையடிகள் தொழுதிருக்க அந்தமிலா ஆனந்தப் பெருங்கூத்தர் அருள்புரிந்தார்.
| [36] |
மாசுடம்பு விடத்தீயில் மஞ்சனஞ்செய் தருளிஎழுந் தாசில்மறை முனியாகி அம்பலவர் தாளடைந்தார் தேசுடைய கழல்வாழ்த்தித் திருக்குறிப்புத் தொண்டர்வினைப் பாசம்அற முயன்றவர்தம் திருத்தொண்டின் பரிசுரைப்பாம்.
| [37] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12.190  
திருக் குறிப்புத் தொண்ட
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
ஏயு மாறுபல் உயிர்களுக் கெல்லையில் கருணைத் தாய னாள்தனி யாயின தலைவரைத் தழுவ ஆயு நான்மறை போற்றநின் றருந்தவம் புரியத் தூய மாதவஞ் செய்தது தொண்டைநன் னாடு.
| [1] |
நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த தன்மை மேவிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப வன்மை ஓங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின் தொன்மை மேன்மையில் நிகழ்பெருந் தொண்டைநன் னாடு.
| [2] |
நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந் துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகால் சொற்ற மெய்ம்மையுந் தூக்கிஅச் சொல்லையே காககப் பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு.
| [3] |
ஆணை யாமென நீறுகண் டடிச்சேரன் என்னும் சேணு லாவு சீர்ச் சேரனார் திருமலை நாட்டு வாணி லாவுபூண் வயவர்கள் மைத்துனக் கேண்மை பேண நீடிய முறையது பெருந்தொண்டை நாடு.
| [4] |
கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய்ம் முறைமை நிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால் பிறையு ரிஞ்செயிற் பதிபயில் பெருந்தொண்டை நாடு முறைமை யாமென உலகினில் மிகுமொழி உடைத்தால்.
| [5] |
தாவில் செம்மணி அருவியா றிழிவன சாரல் பூவில் வண்டினம் புதுநற வருந்துவ புறவம் வாவி நீள்கயல் வரம்பிற உகைப்பன மருதம் நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.
| [6] |
குறவர் பன்மணி அரித்திதை விதைப்பன குறிஞ்சி கறவை ஆன்நிரை மானுடன் பயில்வன கானம் பறவை தாமரை யிருந்திற வருந்துவ பழனஞ் சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல்.
| [7] |
கொண்டல் வானத்தின் மணிசொரி வனகுல வரைப்பால் தண்டு ணர்க்கொன்றை பொன்சொரி வனதள வயற்பால் வண்டல் முத்தநீர் மண்டுகால் சொரிவன வயற்பால் கண்டல் முன்துறைக் கரிசொரி வனகலங் கடற்பால்.
| [8] |
தேனி றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர் பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி தூநெ லன்னம்நெய் கன்னலின் கனியதண் டுறையூர் மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள்.
| [9] |
குழல்செய் வண்டினங் குறிஞ்சியாழ் முரல்வன குறிஞ்சி முழவு கார்கொள முல்லைகள் முகைப்பன முல்லை மழலை மென்கிளி மருதமர் சேக்கைய மருதம் நிழல்செய் கைதைசூழ் நெய்தலங் கழியன நெய்தல்.
| [10] |
மல்கும் அப்பெரு நிலங்களில் வரைபுணர் குறிஞ்சி எல்லை எங்கணும் இறவுளர் ஏனல்முன் விளைக்கும் பல்பெ ரும்புனம் பயில்வன படர்சிறைத் தோகை சொல்லும் அப்புனங் காப்பவுஞ் சுரிகுழல் தோகை.
| [11] |
அங்கண் வான்மிசை அரம்பையர் கருங்குழற் சுரும்பு பொங்கு பூண்முலைக் கொடிச்சியர் குழல்மூழ்கிப் போகாச் செங்கண் மால்விடை யார்திருக் காளத்தி யென்னும் மங்குல் சூழ்வரை நிலவிய வாழ்வினால் மல்கும்.
| [12] |
பேறு வேறுசூழ் இமையவர் அரம்பையர் பிறந்து மாறில் வேடரும் மாதரு மாகவே வணங்கும் ஆறு சூழ்சடை அண்ணலார் திருவிடைச் சுரமுங் கூறு மேன்மையின் மிக்கதந் நாட்டுவண் குறிஞ்சி.
| [13] |
அம்பொன் வார்குழல் கொடிச்சியர் உடன்அர மகளிர் வம்பு லாமலர்ச் சுனைபடிந் தாடுநீள் வரைப்பின் உம்பர் நாயகர் திருக்கழுக் குன்றமும் உடைத்தால் கொம்பர் வண்டுசூழ் குறிஞ்சிசெய் தவங்குறை யுளதோ.
| [14] |
கோல முல்லையுங் குறிஞ்சியு மடுத்தசில் லிடங்கள் நீல வாட்படை நீலிகோட் டங்களும் நிரந்து கால வேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப் பாலை யுஞ்சொல லாவன உளபரல் முரம்பு.
| [15] |
சொல்லும் எல்லையின் புறத்தன துணர்ச்சுரும் பலைக்கும் பல்பெ ரும்புனல் கானியா றிடையிடை பரந்து கொல்லை மெல்லிணர்க் குருந்தின்மேல் படர்ந்தபூம் பந்தர் முல்லை மென்புதல் முயலுகைத் தடங்குநீள் முல்லை.
| [16] |
பிளவு கொண்டதண் மதிநுதற் பேதையர் எயிற்றைக் களவு கொண்டது தளவெனக் களவலர் தூற்றும் அளவு கண்டவர் குழல்நிறங் கனியும்அக் களவைத் தளவு கண்டெதிர் சிரிப்பன தமக்குமுண் டென்று.
| [17] |
மங்கை யர்க்குவாள் விழியிணை தோற்றமான் குலங்கள் எங்கும் மற்றவர் இடைக்கிடை மலர்க்கொடி யெங்கும் அங்கண் முல்லையின் தெய்வமென் றருந்தமிழ் உரைக்கும் செங்கண் மால்தொழும் சிவன்மகிழ் திருமுல்லை வாயில்.
| [18] |
நீறு சேர்திரு மேனியர் நிலாத்திகழ் முடிமேல் மாறில் கங்கைதான் வாக்கும்மஞ் சனம்தர அணைந்தே ஊறு நீர்தரும் ஒளிமலர்க் கலிகைமா நகரை வேறு தன்பெரு வைப்பென விளங்குமா முல்லை.
| [19] |
வாச மென்மலர் மல்கிய முல்லைசூழ் மருதம் வீசு தெண்டிரை நதிபல மிக்குயர்ந் தோடிப் பாச டைத்தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும் பூசல் வன்கரைக் குளங்களும் ஏரியும் புகுவ.
| [20] |
துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால் பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே அங்கண் நித்திலஞ் சந்தனம் அகிலொடு மணிகள் பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி.
| [21] |
பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய்போல் மள்ளர் வேனிலின் மணல்திடர் பிசைந்துகை வருட வெள்ள நீரிரு மருங்குகால் வழிமிதந் தேறிப் பள்ள நீள்வயல் பருமடை உடைப்பது பாலி.
| [22] |
அனைய வாகிய நதிபரந் தகன்பணை மருங்கில் கனைநெ டும்புனல் நிறைந்துதிண் கரைப்பொரும் குளங்கள் புனையி ருங்கடி மதகுவாய் திறந்திடப் புறம்போய் வினைஞர் ஆர்ப்பொலி யெடுப்பநீர் வழங்குவ வியன்கால்.
| [23] |
மாறில் வண்பகட் டேர்பல நெருங்கிட வயல்கள் சேறு செய்பவர் செந்நெலின் வெண்முளை சிதறி நாறு வார்ப்பவர் பறிப்பவர் நடுபவ ரான வேறு பல்வினை யுடைப்பெருங் கம்பலை மிகுமால்.
| [24] |
வரும்பு னற்பெருங் கால்களை மறித்திட வாளை பெருங்கு லைப்பட விலங்குவ பிறங்குநீர்ப் பழனம் நெருங்கு சேற்குல முயர்த்துவ நீள்கரைப் படுத்துச் சுருங்கை நீர்வழக் கறுப்பன பருவரால் தொகுதி.
| [25] |
தளைத்த டம்பணை எழுந்தசெந் தாமரைத் தவிசின் இளைத்த சூல்வளை கண்படுப் பனஇடை யெங்கும் விளைத்த பாசொளி விளங்குநீள் விசும்பிடை யூர்கோள் வளைத்த மாமதி போன்றுள மருதநீர் வைப்பு.
| [26] |
ஓங்கு செந்நெலின் புடையன உயர்கழைக் கரும்பு பூங்க ரும்பயல் மிடைவன பூகம்அப் பூகப் பாங்கு நீள்குலைத் தெங்குபைங் கதலிவண் பலவு தூங்கு தீங்கனிச் சூதநீள் வேலிய சோலை.
| [27] |
நீடு தண்பணை உடுத்தநீள் மருங்கின நெல்லின் கூடு துன்றிய இருக்கைய விருந்தெதிர் கொள்ளும் பீடு தங்கிய பெருங்குடி மனையறம் பிறங்கும் மாட மோங்கிய மறுகின மல்லல்மூ தூர்கள்.
| [28] |
தொல்லை நான்மறை முதற்பெருங் கலையொலி துவன்றி இல்ல றம்புரிந் தாகுதி வேள்வியில் எழுந்த மல்கு திண்புகை மழைதரு முகிற்குலம் பரப்பும் செல்வ மோங்கிய திருமறை யவர்செழும் பதிகள்.
| [29] |
தீது நீங்கிடத் தீக்கலி யாம்அவு ணற்கு நாதர் தாமருள் புரிந்தது நல்வினைப் பயன்செய் மாதர் தோன்றிய மரபுடை மறையவர் வல்லம் பூதி சாதனம் போற்றிய பொற்பினால் விளங்கும்.
| [30] |
அருவி தந்தசெம் மணிகளும் புறவில்ஆய் மலரும் பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையின் மருவு கங்கைவாழ் சடையவர் மகிழ்ந்தமாற் பேறாம் பொருவில் கோயிலுஞ் சூழ்ந்ததப் பூம்பணை மருதம்.
| [31] |
விரும்பு மேன்மையென் பகர்வது விரிதிரை நதிகள் அருங்க ரைப்பயில் சிவாலயம் அனேகமும் அணைந்து பருங்கை யானையை உரித்தவர் இருந்தஅப் பாசூர் மருங்கு சூழ்தவம் புரிந்ததன் றோமற்ற மருதம்.
| [32] |
பூம ரும்புனல் வயற்களம் பாடிய பொருநர் தாம ருங்கிளை உடன்தட மென்மலர் மிலைந்து மாம ருங்குதண் ணீழலின் மருதயாழ் முரலும் காமர் தண்பணைப் புறத்தது கருங்கழி நெய்தல்.
| [33] |
தூய வெண்டுறைப் பரதவர் தொடுப்பன வலைகள் சேய நீள்விழிப் பரத்தியர் தொடுப்பன செருந்தி ஆய பேரளத் தளவர்கள் அளப்பன உப்பு சாயல் மெல்லிடை அளத்தியர் அளப்பன தரளம்.
| [34] |
கொடுவி னைத்தொழில் நுளையர்கள் கொடுப்பன கொழுமீன் படும ணற்கரை நுளைச்சியர் கொடுப்பன பவளம் தொடுக டற்சங்கு துறையவர் குளிப்பன அவர்தம் வடுவ கிர்க்கண்மங் கையர்குளிப் பனமணற் கேணி.
| [35] |
சுழிப்பு னற்கடல் ஓதமுன் சூழ்ந்துகொண் டணிய வழிக்க ரைப்பொதிப் பொன்னவிழ்ப் பனமலர்ப் புன்னை விழிக்கு நெய்தலின் விரைமலர்க் கண்சுரும் புண்ணக் கழிக்க ரைப்பொதி சோறவிழ்ப் பனமடற் கைதை.
| [36] |
காயல் வண்கரைப் புரைநெறி அடைப்பன கனிமுள் சேய தண்ணறுஞ் செழுமுகை செறியும்முண் டகங்கள் ஆய நுண்மணல் வெண்மையை மறைப்பன அன்னந் தாய முன்துறைச் சூழல்சூழ் ஞாழலின் தாது.
| [37] |
வாம்பெ ருந்திரை வளாகமுன் குடிபயில் வரைப்பில் தாம்ப ரப்பிய கயல்களின் விழிக்கயல் தவிரக் காம்பின் நேர்வருந் தோளியர் கழிக்கயல் விலைசெய் தேம்பொ திந்தசின் மழலைமென் மொழியசெவ் வழியாழ்.
| [38] |
மருட்கொ டுந்தொழில் மன்னவன் இறக்கிய வரியை நெருக்கி முன்திரு வொற்றியூர் நீங்கலென் றெழுதும் ஒருத்தர் தம்பெருங் கோயிலின் ஒருபுறஞ் சூழ்ந்த திருப்ப ரப்பையும் உடையதத் திரைக்கடல் வரைப்பு.
| [39] |
மெய்த ரும்புகழ்த் திருமயி லாபுரி விரைசூழ் மொய்த யங்குதண் பொழில்திரு வான்மியூர் முதலாப் பைத ரும்பணி அணிந்தவர் பதியெனைப் பலவால் நெய்தல் எய்தமுன் செய்தஅந் நிறைதவம் சிறிதோ.
| [40] |
கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து மாடு மொய்வரைச் சந்தனச் சினைமிசை வளரும் நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர்நிலம் பலவால் ஆடு நீள்கொடி மாடமா மல்லையே அனைய.
| [41] |
மலைவி ழிப்பன எனவயற் சேல்வரைப் பாறைத் தலையு கைப்பவுந் தளைச்செறு விடைநெடுங் கருமான் கலைகு திப்பன கரும்பகட் டேர்நிகர்ப் பவுமாய் அலைபு னற்பணை குறிஞ்சியோ டணைவன அனேகம்.
| [42] |
புணர்ந்த ஆனிரைப் புறவிடைக் குறுமுயல் பொருப்பின் அணைந்த வான்மதி முயலினை இனமென அணைந்து மணங்கொள் கொல்லையில் வரகுபோர் மஞ்சன வரைக்கார் இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும்.
| [43] |
கவரும் மீன்குவை கழியவர் கானவர்க் களித்துச் சிவலுஞ் சேவலும் மாறியுஞ் சிறுகழிச் சியர்கள் அவரை ஏனலுக் கெயிற்றியர் பவளமுத் தளந்தும் உவரி நெய்தலுங் கானமுங் கலந்துள ஒழுக்கம்.
| [44] |
அயல்ந றும்புற வினில்இடைச் சியர்அணி நடையும் வியன்நெ டும்பணை உழத்தியர் சாயலும் விரும்பி இயலும் அன்னமும் தோகையும் எதிரெதிர் பயில வயலும் முல்லையும் இயைவன பலவுள மருங்கு.
| [45] |
மீளும் ஓதம்முன் கொழித்தவெண் தரளமும் கமுகின் பாளை உக்கவும் விரவலிற் பரத்தியர் பணைமென் தோளு ழத்தியர் மகளிர்மா றாடிமுன் தொகுக்கும் நீளும் நெய்தலும் மருதமும் கலந்துள நிலங்கள்.
| [46] |
ஆய நானிலத் தமைதியில் தத்தமக் கடுத்த மேய செய்தொழில் வேறுபல் குலங்களின் விளங்கித் தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூய மாந்தர்வாழ் தொண்டைநாட் டியல்புசொல் வரைத்தோ.
| [47] |
இவ்வ ளந்தரு பெருந்திரு நாட்டிடை என்றும் மெய்வ ளந்தரு சிறப்பினால் உலகெலாம் வியப்ப எவ்வு கங்களும் உள்ளதென் றியாவரும் ஏத்தும் கைவி ளங்கிய நிலையது காஞ்சிமா நகரம்.
| [48] |
ஆன தொன்னகர் அம்பிகை தம்பெரு மானை மான அர்ச்சனை யாலொரு காலத்து வழிபட் டூன மில்அறம் அனேகமும் உலகுய்ய வைத்த மேன்மை பூண்டஅப் பெருமையை அறிந்தவா விளம்பில்.
| [49] |
வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித் துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள்.
| [50] |
எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும் உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள் பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.
| [51] |
நங்கை உள்நிறை காதலை நோக்கி நாய கன்திரு வுள்ளத்து மகிழ்ந்தே அங்கண் எய்திய முறுவலுந் தோன்ற அடுத்த தென்கொல்நின் பாலென வினவ இங்கு நாதநீ மொழிந்தஆ கமத்தின் இயல்பி னால்உனை அர்ச்சனை புரியப் பொங்கு கின்றதென் னாசையென் றிறைஞ்சிப் போக மார்த்தபூண் முலையினாள் போற்ற.
| [52] |
தேவ தேவனும் அதுதிரு வுள்ளஞ் செய்து தென்திசை மிக்கசெய் தவத்தால் யாவ ருந்தனை யடைவது மண்மேல் என்று முள்ளது காஞ்சிமற் றதனுள் மாஅ மர்ந்தநம் இருக்கையி லணைந்து மன்னு பூசனை மகிழ்ந்துசெய் வாயென் றேவ வெம்பெரு மாட்டியும் பிரியா விசைவு கொண்டெழுந் தருளுதற் கிசைந்தாள்.
| [53] |
ஏத மில்பல யோனிஎண் பத்து நான்கு நூறாயி ரந்தனுள் வைத்த பேத மும்புரந் தருளும்அக் கருணைப் பிரான்மொ ழிந்தஆ கமவழி பேணிப் போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில் வேந்தனும் விருப்பில்வந் தெய்தி மாத வம்புரிந் தருளுதற் கமைந்த வளத்தொ டும்பரி சனங்களை விடுத்தான்.
| [54] |
துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து டன்செலக் காஞ்சியில் அணையத் தன்னை நேர்வரும் பதுமமா நாகந் தம்பி ராட்டிதாள் தலைமிசை வைத்தே அன்னை யாயுல கனைத்தையும் ஈன்றாய் அடிய னேன்உறை பிலமத னிடையே மன்னு கோயில்கொண் டருளுவாய் என்ன மலைம டந்தைமற் றதற்கருள் புரிந்து.
| [55] |
அங்கு மண்ணுல கத்துயிர் தழைப்ப அளவில் இன்பத்தின் அருட்கரு விருத்தித் திங்கள் தங்கிய புரிசடை யார்க்குத் திருந்து பூசனை விரும்பினள் செய்ய எங்கும் நாடவுந் திருவிளை யாட்டால் ஏக மாமுதல் எதிர்ப்படா தொழியப் பொங்கு மாதவஞ் செய்துகாண் பதற்கே புரிவு செய்தனள் பொன்மலை வல்லி.
| [56] |
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி நிரந்த ரந்திரு வாக்கினில் நிகழ்வ தஞ்செ ழுத்துமே யாகஆ ளுடைய அம்மை செம்மலர்க் கைகுவித் திறைஞ்சித் தஞ்ச மாகிய அருந்தவம் புரியத் தரிப்ப ரேஅவள் தனிப்பெருங் கணவர் வஞ்சம் நீக்கிய மாவின்மூ லத்தில் வந்து தோன்றினார் மலைமகள் காண.
| [57] |
கண்ட போதிலப் பெருந்தவப் பயனாம் கம்பம் மேவிய தம்பெரு மானை வண்டு லாங்குழற் கற்றைமுன் தாழ வணங்கி வந்தெழும் ஆசைமுன் பொங்கக் கொண்ட காதலின் விருப்பள வின்றிக் குறித்த பூசனை கொள்கைமேற் கொண்டு தொண்டை யங்கனி வாயுமை நங்கை தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள்.
| [58] |
உம்பர் நாயகர் பூசனைக் கவர்தாம் உரைத்த ஆகமத் துண்மையே தலைநின் றெம்பி ராட்டிஅர்ச் சனைபுரி வதனுக் கியல்பில் வாழ்திருச் சேடிய ரான கொம்ப னார்கள்பூம் பிடகைகொண் டணையக் குலவு மென்தளி ரடியிணை யொதுங்கி அம்பி காவன மாந்திரு வனத்தி லான தூநறும் புதுமலர் கொய்தாள்.
| [59] |
கொய்த பன்மலர் கம்பைமா நதியில் குலவு மஞ்சனம் நிலவுமெய்ப் பூச்சு நெய்த ருங்கொழுந் தூபதீ பங்கள் நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின் மெய்த ரும்படி வேண்டின வெல்லாம் வேண்டும் போதினில் உதவமெய்ப் பூசை எய்த ஆகம விதியெலாம் செய்தாள் உயிர்கள் யாவையும் ஈன்றவெம் பிராட்டி.
| [60] |
கரந்த ரும்பயன் இதுவென உணர்ந்து கம்பம் மேவிய உம்பர்நா யகர்பால் நிரந்த காதல்செய் உள்ளத்த ளாகி நீடு நன்மைகள் யாவையும் பெருக வரந்த ரும்பொரு ளாம்மலை வல்லி மாறி லாவகை மலர்ந்தபே ரன்பால் சிரம்ப ணிந்தெழு பூசைநா டோறுந் திருவு ளங்கொளப் பெருகிய தன்றே.
| [61] |
நாத ரும்பெரு விருப்பொடு நயந்து நங்கை யர்ச்சனை செய்யுமப் பொழுதில் காதல் மிக்கதோர் திருவிளை யாட்டில் கனங்கு ழைக்கருள் புரிந்திட வேண்டி ஓத மார்கடல் ஏழும்ஒன் றாகி ஓங்கி வானமும் உட்படப் பரந்து மீது செல்வது போல்வரக் கம்பை வெள்ள மாந்திரு உள்ளமுஞ் செய்தார்.
| [62] |
அண்ண லாரருள் வெள்ளத்தை நோக்கி அங்க யற்கண்ணி தம்பெரு மான்மேல் விண்ணெ லாங்கொள வரும்பெரு வெள்ளம் மீது வந்துறும் எனவெருக் கொண்டே உண்ணி லாவிய பதைப்புறு காதல் உடன்தி ருக்கையால் தடுக்கநில் லாமை தண்ணி லாமலர் வேணி யினாரைத் தழுவிக் கொண்டனள் தன்னையே ஒப்பாள்.
| [63] |
மலைக்கு லக்கொடி பரிவுறு பயத்தால் மாவின் மேவிய தேவநா யகரை முலைக்கு வட்டொடு வளைக்கையால் நெருக்கி முறுகு காதலால் இறுகிடத் தழுவச் சிலைத்த னித்திரு நுதல்திரு முலைக்கும் செந்தளிர்க் கரங்க ளுக்கும்மெத் தெனவே கொலைக்க ளிற்றுரி புனைந்ததம் மேனி குழைந்து காட்டினார் விழைந்தகொள் கையினார்.
| [64] |
கம்பர் காதலி தழுவமெய் குழையக் கண்டு நிற்பவுஞ் சரிப்பவு மான உம்ப ரேமுதல் யோனிக ளெல்லாம் உயிரும் யாக்கையும் உருகியொன் றாகி எம்பி ராட்டிக்கு மெல்லிய ரானார் என்றும் ஏகம்பர் என்றெடுத் தேத்த வம்பு லாமலர் நிறையவிண் பொழியக் கம்பை யாறுமுன் வணங்கிய தன்றே.
| [65] |
பூதி யாகிய புனிதநீ றாடிப் பொங்கு கங்கைதோய் முடிச்சடை புனைந்து காதில் வெண்குழை கண்டிகை தாழக் கலந்த யோகத்தின் மருவிய கருத்தால் ஆதி தேவனா ராயுமா தவஞ்செய் அவ்வ ரங்கொலோ அகிலம்ஈன் றளித்த மாது மெய்ப்பயன் கொடுப்பவே கொண்டு வளைத்த ழும்புடன் முலைச்சுவ டணிந்தார்.
| [66] |
கோதி லாஅமு தனையவள் முலைக்குக் குழைந்த தம்மண வாளநற் கோலம் மாது வாழவே காட்டிமுன் நின்று வரங்கள் வேண்டுவ கொள்கஎன் றருள வேத காரண ராயஏ கம்பர் விரைம லர்ச்செய்ய தாமரைக் கழற்கீழ் ஏதம் நீங்கிய பூசனை முடிந்த தின்மை தானறி விப்பதற் கிறைஞ்சி.
| [67] |
அண்டர் நாயகர் எதிர்நின்று கூறும் அளவி னால்அஞ்சி அஞ்சலி கூப்பிக் கொண்ட இற்றையென் பூசனை யின்னும் குறைநி ரம்பிடக் கொள்கஎன் றருள வண்டு வார்குழல் மலைமகள் கமல வதனம் நோக்கிஅம் மலர்க்கண்நெற் றியின்மேல் முண்ட நீற்றர்நின் பூசனை யென்றும் முடிவ தில்லைநம் பாலென மொழிய.
| [68] |
மாறி லாதஇப் பூசனை யென்றும் மன்ன எம்பிரான் மகிழ்ந்துகொண் டருளி ஈறி லாதஇப் பதியினு ளெல்லா அறமும் யான்செய அருள்செய வேண்டும் வேறு செய்வினை திருவடிப் பிழைத்தல் ஒழிய இங்குளார் வேண்டின செயினும் பேறு மாதவப் பயன்கொடுத் தருளப் பெறவும் வேண்டும்என் றனள்பிறப் பொழிப்பாள்.
| [69] |
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட விரும்பு பூசனை மேவிவீற் றிருந்தே இடைய றாஅறம் வளர்க்கும்வித் தாக இகப ரத்திரு நாழிநெல் லளித்துக் கடைய ராகியும் உயர்ந்தவ ராயுங் காஞ்சி வாழ்பவர் தாஞ்செய்தீ வினையுந் தடைப டாதுமெய்ந் நெறியடை வதற்காம் தவங்க ளாகவும் உவந்தருள் செய்தார்.
| [70] |
எண்ண ரும்பெரு வரங்கள்முன் பெற்றங் கெம்பி ராட்டிதம் பிரான்மகிழ்ந் தருள மண்ணின் மேல்வழி பாடுசெய் தருளி மனைய றம்பெருக் குங்கரு ணையினால் நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க நாடு காதலில் நீடிய வாழ்க்கைப் புண்ணி யத்திருக் காமக்கோட் டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்.
| [71] |
அலகில் நீள்தவத் தறப்பெருஞ் செல்வி அண்ட மாந்திரு மனைக்கிடுந் தீபம் உலகில் வந்துறு பயனறி விக்க ஓங்கும் நாண்மலர் மூன்றுட னொன்று நிலவ ஆண்டினுக் கொருமுறை செய்யும் நீடு தொன்மையால் நிறைந்தபே ருலகம் மலர்பெ ருந்திருக் காமக்கோட் டத்து வைத்த நல்லறம் மன்னவே மன்னும்.
| [72] |
தீங்கு தீர்க்குநல் தீர்த்தங்கள் போற்றுஞ் சிறப்பி னால்திருக் காமக்கோட் டத்தின் பாங்கு மூன்றுல கத்தினுள் ளோரும் பரவு தீர்த்தமாம் பைம்புனற் கேணி வாங்கு தெண்டிரை வேலைமே கலைசூழ் வைய கந்தனக் கெய்திய படியாய் ஓங்கு தன்வடி வாய்நிகழ்ந் தென்றும் உள்ள தொன்றுல காணியென் றுளதால்.
| [73] |
அந்த மின்றிநல் லறம்புரிந் தளிக்கும் அம்மை தன்திருக் காமக்கோட் டத்தில் வந்து சந்திர சூரியர் மீது வழிக்கொ ளாததன் மருங்குபோ தலினால் சந்த மாதிர மயங்கியெம் மருங்குஞ் சாயை மாறிய தன்றிசை மயக்கம் இந்த மாநிலத் தவரெலாங் காண என்றும் உள்ளதொன் றின்றுமங் குளதால்.
| [74] |
கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில் காஞ்சி யாந்திரு நதிக்கரை மருங்கு சென்னி யிற்பிறை யணிந்தவர் விரும்பும் திருப்பெ ரும்பெய ரிருக்கையில் திகழ்ந்து மன்னு வெங்கதிர் மீதெழும் போதும் மறித்து மேல்கடல் தலைவிழும் போதும் தன்னி ழற்பிரி யாதவண் காஞ்சித் தானம் மேவிய மேன்மையும் உடைத்தால்.
| [75] |
மறைக ளால்துதித் தருந்தவம் புரிந்து மாறி லாநிய மந்தலை நின்று முறைமை யால்வரும் பூசனை செய்ய முனிவர் வானவர் முதலுயி ரெல்லாம் நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு காமங்கள் அவரவர்க் கருளி இறைவர் தாமகிழ்ந் தருளிய தளிகள் எண்ணி றந்தஅத் திருநக ரெல்லை.
| [76] |
மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில் மண்ணில் மிக்கதோர் நன்மையி னாலே துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன் துரக்க வெய்திய தொலைவில்ஊக் கத்தால் தன்னி லத்துநின் றகற்றுதல் செய்யும் தான மன்றியும் தனுவெழுந் தரணி எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத் தானமென் றிவைஇ யல்பினில் உடைத்தால்.
| [77] |
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி இன்ப மேதரும் புண்ணிய தீர்த்தம் வேண்டி னார்தமக் கிட்டசித் தியதாய் விளங்கு தீர்த்தம்நன் மங்கல தீர்த்தம் நீண்ட காப்புடைத் தீர்த்தம்மூன் றுலகில் நிகழ்ந்த சாருவ தீர்த்தமும் முதலா ஆண்டு நீடிய தீர்த்தம் எண் ணிலவும் அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார்.
| [78] |
தாள தொன்றினில் மூன்றுபூ மலரும் தமனி யச்செழுந் தாமரைத் தடமும் நீள வார்புனல் குடதிசை யோடி நீர்க ரக்குமா நதியுடன் நீடு நாள லர்ந்துசெங் குவளைபைங் கமலம் நண்ப கல்தரும் பாடலம் அன்றிக் காள மேகம்ஒப் பாள்உறை வரைப்பிற் கண்ப டாதகா யாப்புளி உளதால்.
| [79] |
சாயை முன்பிணிக் கும்கிண றொன்று தஞ்சம் உண்ணில்நஞ் சாம்தடமொன்று மாயை யின்றிவந் துள்ளடைந் தார்கள் வான ரத்துரு வாம்பிலம் ஒன்று மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும் விளங்கு பொய்கையும் ஒன்றுவிண் ணவரோ டாய இன்பம்உய்க் கும்பிலம் ஒன்றோ டனைய ஆகிய அதிசயம் பலவால்.
| [80] |
அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர் ஆனை நிற்கவும் அரையிருள் திரியும் மஞ்சு நீள்வது போலுமா மேனி மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின் நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை எஞ்ச லின்றிமுன் திரியவுங் குன்றம் எறிந்த வேலவன் காக்கவும் இசையும்.
| [81] |
சத்தி தற்பர சித்தயோ கிகளும் சாத கத்தனித் தலைவ ரும் முதலா நித்தம் எய்திய ஆயுள்மெய்த் தவர்கள் நீடு வாழ்திருப் பாடியும் அனேகஞ் சித்தர் விஞ்சையர் இயக்கர்கந் தருவர் திகழ்ந்து மன்னுவார் செண்டுகை யேந்தி வித்த கக்கரி மேல்கொளுங் காரி மேவு செண்டணை வெளியுமொன் றுளதால்.
| [82] |
வந்த டைந்தவர் தம்முரு மாய மற்று ளாரைத்தாங் காண்பிட முளது சிந்தை யோகத்து முனிவர்யோ கினிகள் சேரும் யோகபீ டமும்உள தென்றும் அந்த மில்அறம் புரப்பவள் கோயில் ஆன போகபீ டமும்உள தாகும் எந்தை யார்மகிழ் காஞ்சிநீ டெல்லை எல்லை யில்லன உள்ளஆ ரறிவார்.
| [83] |
தூண்டு சோதியொன் றெழுந்திருள் துரக்கும் சுரர்கள் வந்துசூழ் உருத்திர சோலை வேண்டி னார்கள்தம் பிறப்பினை யொழிக்கும் மெய்ந்நெ றிக்கண்நின் றார்கள்தாம் விரும்பித் தீண்டில் யாவையுஞ் செம்பொனாக் குவதோர் சிலையும் உண்டுரை செய்வதற் கரிதால் ஆண்ட நாயகி சமயங்க ளாறும் அகில யோனியும் அளிக்கும்அந் நகரம்.
| [84] |
என்றும் உள்ளவிந் நகர்கலி யுகத்தில் இலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன் வன்றி றற்புலி இமயமால் வரைமேல் வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை சென்று வேடன்முன் கண்டுரை செய்யத் திருந்து காதநான் குட்பட வகுத்துக் குன்று போலுமா மதில்புடை போக்கிக் குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்.
| [85] |
தண்காஞ்சி மென்சினைப்பூங் கொம்ப ராடல் சார்ந்தசைய அதன்மருங்கு சுரும்பு தாழ்ந்து பண்காஞ்சி இசைபாடும் பழன வேலிப் பணைமருதம் புடையுடைத்தாய்ப் பாரில் நீடும் திண்காஞ்சி நகர்நொச்சி இஞ்சி சூழ்ந்த செழுங்கிடங்கு திருமறைக ள் ஒலிக்குந் தெய்வ வண்காஞ்சி அல்குல்மலை வல்லி காக்க வளர்கருணைக் கடலுலகஞ் சூழ்ந்தால் மானும்.
| [86] |
கொந்தலர்பூங் குழல்இமயக் கொம்பு கம்பர் கொள்ளும்பூ சனைகுறித்த தானங் காக்க மந்திரமா மதிலகழி அவர்தாந் தந்த வாய்மைஆ கமவிதியின் வகுப்புப் போலும் அந்தமில்சீர்க் காஞ்சியைவந் தடைந்தார்க் கன்றி அடைகளங்கம் அறுப்பரிதென் றறிந்து சூழ வந்தணைந்து தன்கறுப்பும் உவர்ப்பும் நீக்கும் மாகடலும் போலுமலர்க் கிடங்கு மாதோ.
| [87] |
ஆங்குவளர் எயிலினுடன் விளங்கும் வாயில் அப்பதியில் வாழ்பெரியோர் உள்ளம் போல ஓங்குநிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய உமைபாகர் அருள்செய்த ஒழுக்க மல்லால் தீங்குநெறி அடையாத தடையு மாகிச் செந்நெறிக்கண் நிகழ்வாய்மை திருந்து மார்க்கம் தாங்குலவ நிலவிவளர் ஒளியா லென்றும் தடநெடுவான் அளப்பனவாந் தகைய வாகும்.
| [88] |
மாறுபெறல் அருங்கனக மாடம் நீடு மணிமறுகும் நெடுந்தெருவும் வளத்தில் வந்த ஆறுபயில் ஆவணவீ திகளும் மற்றும் அமைந்தநகர் அணிவரைகள் நடுவு போக்கிக் கூறுபடு நவகண்ட மன்றி மல்கக் கொண்டஅனே கங்கண்ட மாகி யன்ன வேறொருமண் ணுலகுதனில் உளதாம் என்ன விளங்கியமா லோகநிலை மேவிற் றன்றே.
| [89] |
பாகமருங் கிருபுடையும் உயர்ந்து நீண்ட படரொளிமா ளிகைநிரைகள் பயில்மென் கூந்தல் தோகையர்தங் குழாமலையத் தூக்கு முத்தின் சுடர்க்கோவைக் குளிர்நீர்மை துதைந்த வீதி மாகமிடை யொளிதழைப்ப மன்னி நீடு மருங்குதா ரகைஅலைய வரம்பில் வண்ண மேகமிடை கிழித்தொழுகுந் தெய்வக் கங்கை மேல்நதிகள் பலமண்மேல் விளங்கி ஓங்கும்.
| [90] |
கிளரொளிச்செங் கனகமயந் தானாய் மாடு கீழ்நிலையோர் நீலச்சோ பானம் பூணக் கொளவமைத்து மீதொருபாற் கன்ன சாலை குலவயிரத் தாலமைத்த கொள்கை யாலே அளவில்சுடர்ப் பிழம்பானார் தம்மைத் தேடி அகழ்ந்தேனம் ஆனானும் அன்ன மாகி வளர்விசும்பில் எழுந்தானும் போல நீடும் மாளிகைகள் உளமற்ற மறுகு தோறும்.
| [91] |
மின்பொலிபன் மணிமிடைந்த தவள மாட மிசைப்பயில்சந் திரகாந்தம் விசும்பின் மீது பொன்புரையுஞ் செக்கர்நிறப் பொழுது தோன்றும் புனிற்றுமதி கண்டுருகிப் பொழிந்த நீரால் வன்புலியி னுரியாடைத் திருவே கம்பர் வளர்சடையும் இளம்பிறையுங் கண்டு கும்பிட் டன்புருகி மெய்பொழியக் கண்ணீர் வாரும் அடியவரும் அனையவுள அலகி லாத.
| [92] |
முகிலுரிஞ்சுங் கொடிதொடுத்த முடிய வாகும் முழுப்பளிங்கின் மாளிகைக்கள் முற்றுஞ் சுற்றும் நிகரில்சரா சரங்களெல்லாம் நிழலி னாலே நிறைதலினால் நிறைதவஞ்செய் இமயப் பாவை நகிலுழுத சுவடும்வளைத் தழும்பும் பூண்ட நாயகனார் நான்முகற்குப் படைக்க நல்கும் அகிலயோ னிகளெல்லாம் அமைத்து வைத்த அரும்பெரும்பண் டாரநிலை யனைய வாகும்.
| [93] |
பொற்களப மாளிகைமேல் முன்றில் நின்று பூங்கழங்கும் மணிப்பந்தும் போற்றி யாடும் விற்புருவக் கொடிமடவார் கலன்கள் சிந்தி விழுவனவும் கெழுவுதுணை மேவு மாதர் அற்புமுதிர் கலவியினிற் பரிந்து சிந்தும் அணிமணிச்சே டியர்தொகுக்கும் அவையு மாகி நற்கனக மழையன்றிக் காஞ்சி யெல்லை நவமணிமா ரியும்பொழியும் நாளும் நாளும்.
| [94] |
பூமகளுக் குறையுளெனுந் தகைய வான பொன்மாடத் தரமியங்கள் பொலிய நின்று மாமகரக் குழைமகளிர் மைந்தர் அங்கண் வந்தேறு முன்நறுநீர் வண்ட லாடத் தூமணிப்பொன் புனைநாளத் துருத்தி வீசும் சுடர்விடுசெங் குங்குமநீர்த் துவலை தோய்ந்த காமர்மணி நாசிகையின் மருங்கு தங்கும் கருமுகில்கள் செம்முகில்க ளாகிக் காட்டும்.
| [95] |
இமமலிய வெடுத்தநெடு வரைகள் போல இலங்குசுதைத் தவளமா ளிகைநீள் கோட்டுச் சிமையடையுஞ் சோபான நிரையும் விண்ணும் தெரிவரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து தமர்களுடன் இழிந்தேறு மைந்தர் மாதர் தங்களையும் விசும்பிடைநின் றிழியா நிற்கும் அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வே றறிவரிதாந் தகைமையன அனேகம் அங்கண்.
| [96] |
அரவநெடுந் தேர்வீதி அருகு மாடத் தணிமணிக்கோ புரத்தயலே வியல்வாய் நீண்ட விரவுமர கதச்சோதி வேதித் திண்ணை விளிம்பினொளி துளும்பமுறைப் படிமீ தேறுங் குரவமரும் குழல்மடவா ரடியி லூட்டும் குழம்படுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம் பரவைநெடுந் தரங்கமிசை விளங்கித் தோன்றும் பவளநறுந் தளிரனைய பலவும் பாங்கர்.
| [97] |
வெம்புசினக் களிற்றதிர்வும் மாவின் ஆர்ப்பும் வியனெடுந்தேர்க் காலிசைப்பும் விழவ றாத அம்பொன்மணி வீதிகளில் அரங்கி லாடும் அரிவையர்நூ புரஒலியோ டமையும் இம்பர் உம்பரின்இந் திரன்களிற்றின் முழக்குந் தெய்வ உயர்இரவி மாக்கலிப்பும் அயனூர் தித்தேர் பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப் பாவையர்நூ புரஅரவத் துடனே பல்கும்.
| [98] |
அருமறைஅந் தணர்மன்னும் இருக்கை யான ஆகுதியின் புகையடுத்த அம்பொன் மாடப் பெருமறுகு தொறும்வேள்விச் சாலை யெங்கும் பெறுமவிப்பா கங்கொடுக்கும் பெற்றி மேலோர் வருமுறைமை அழைத்துவிடு மந்திரம்எம் மருங்கும் வானவர்நா யகர்திருவே கம்பர் முன்றில் திருமலிபொற் கோபுரத்து நெருங்கும் எல்லாத் தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும்.
| [99] |
அரசர்குலப் பெருந்தெருவும் தெற்றி முற்றத் தாயுதங்கள் பயிலும்வியல் இடமு மங்கண் புரசைமதக் கரிகளொடு புரவி யேறும் பொற்புடைய வீதிகளும் பொலிய வெங்கும் விரைசெய்நறுந் தொடையலங்கல் குமரர் செய்யும் வியப்புறுசெய் தொழில்கண்டு விஞ்சை விண்ணோர் நிரைசெறியும் விமானவூர் திகளின் மேலும் நிலமிசையும் பலமுறையும் நிரந்து நீங்கார்.
| [100] |
வெயிலுமிழும் பன்மணிப்பூண் வணிக மாக்கள் விரவுநிதி வளம்பெருக்கும் வெறுக்கை மிக்க வயினிலவு மணிக்கடைமா நகர்கள் எல்லாம் வனப்புடைய பொருட்குலங்கள் மலிதலாலே கயிலைமலை யார்கச்சி ஆலயங்கள் பலவுங் கம்பமுமே வியதன்மை கண்டு போற்றப் பயிலுமுருப் பலகொண்டு நிதிக்கோன் தங்கப் பயில்அளகா புரிவகுத்த பரிசு காட்டும்.
| [101] |
விழவுமலி திருக்காஞ்சி வரைப்பின் வேளாண் விழுக்குடிமைப் பெருஞ்செல்வர் விளங்கும் வேணி மழஇளவெண் திங்கள்புனை கம்பர் செம்பொன் மலைவல்லிக் களித்தவள ருணவின் மூலந் தொழவுலகு பெறுமவள்தான் அருளப் பெற்றுத் தொன்னிலத்து மன்னுபயிர் வேத வாய்மை உழவுதொழி லாற்பெருக்கி உயிர்க ளெல்லாம் ஓங்கவருந் தருமவினைக் குளரால் என்றும்.
| [102] |
ஓங்கியநாற் குலத்தொவ்வாப் புணர்வில் தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி தாங்குழுமிப் பிறந்தகுல பேத மெல்லாம் தந்தகைமைக் கேற்றதனி யிடங்கள் மேவி ஆங்குநிறை கிளைபயின்று மரபி னாற்ற அடுத்தவினைத் தொழில்முறைமை வழாமை நீடு பாங்குவளர் இருக்கைநிலை பலவும் எல்லாம் பண்புநீ டியவுரிமைப் பால அன்றே.
| [103] |
ஆதி மூதெயில் அந்நகர் மன்னிய சோதி நீள்மணித் தூபமுந் தீபமும் கோதில் பல்லிய முங்கொடி யும்பயில் வீதி நாளும் ஒழியா விழாவணி.
| [104] |
வாயில் எங்கணுந் தோரணம் மாமதில் ஞாயில் எங்கணுஞ் சூழ்முகில் நாள்மதி தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர்சூழ் கோயில் எங்கணும் உம்பர் குலக்குழாம்.
| [105] |
வேத வேதியர் வேள்வியே தீயன மாத ரோதி மலரே பிணியன காதல் வீதிவி லக்கே கவலைய சூத மாதவி யேபுறஞ் சூழ்வன.
| [106] |
சாய லார்கள் நுசுப்பே தளர்வன ஆய மாடக் கொடியே அசைவன சேய ஓடைக் களிறே திகைப்பன பாய சோலைத் தருவே பயத்தன.
| [107] |
அண்ண லார்அன்பர் அன்பேமுன் ஆர்த்தன தண்ண றுஞ்செழுந் தாதே துகளன வண்ண நீள்மணி மாலையே தாழ்வன எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின.
| [108] |
வென்றி வானவர் தாம்விளை யாடலும் என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும் நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள் ஒன்றும் அங்கொழி யாவகை உய்ப்பது.
| [109] |
புரங்க டந்தவர் காஞ்சி புரம்புகழ் பரம்பு நீள்புவ னம்பதி னான்கினும் வரம்பில் போக வனப்பின் வளமெலாம் நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்ததால்.
| [110] |
அவ்வகைய திருநகரம் அதன்கண்ஒரு மருங்குறைவார் இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலிக் குலத்துள்ளார் செவ்வியஅன் புடைமனத்தார் சீலத்தின் நெறிநின்றார் மைவிரவு கண்டரடி வழித்தொண்டர் உளரானார்.
| [111] |
மண்ணின்மிசை வந்ததற்பின் மனமுதலா யினமூன்றும் அண்ணலார் சேவடியின் சார்வாக அணைவிப்பார் புண்ணியமெய்த் தொண்டர்திருக் குறிப்பறிந்து போற்றுநிலைத் திண்மையினால் திருக்குறிப்புத் தொண்டர்எனுஞ் சிறப்பினார்.
| [112] |
தேரொலிக்க மாவொலிக்கத் திசையொலிக்கும் புகழ்க்காஞ்சி ஊரொலிக்கும் பெருவண்ணார் எனவொண்ணா உண்மையினார் நீரொலிக்க அராவிரைக்க நிலாமுகிழ்க்குந் திருமுடியார் பேரொலிக்க உருகுமவர்க் கொலிப்பர்பெரு விருப்பினொடும்.
| [113] |
. தேசுடைய மலர்க்கமலச் சேவடியார் அடியார்தம் தூசுடைய துகள்மாசு கழிப்பார்போல் தொல்லைவினை ஆசுடைய மலம்மூன்றும் அணையவரும் பெரும்பிறவி மாசுதனை விடக்கழித்து வருநாளில் அங்கொருநாள்.
| [114] |
பொன்னிமயப் பொருப்பரையன் பயந்தருளும் பூங்கொடிதன் நன்னிலைமை அன்றளக்க எழுந்தருளும் நம்பெருமான் தன்னுடைய அடியவர்தம் தனித்தொண்டர் தம்முடைய அந்நிலைமை கண்டன்பர்க் கருள்புரிவான் வந்தணைவார்.
| [115] |
சீதமலி காலத்துத் திருக்குறிப்புத் தொண்டர்பால் ஆதுலராய் மெலிந்துமிக அழுக்கடைந்த கந்தையுடன் மாதவவே டந்தாங்கி மாலறியா மலரடிகள் கோதடையா மனத்தவர்முன் குறுநடைகள் கொளக்குறுகி.
| [116] |
திருமேனி வெண்ணீறு திகழ்ந்தொளிருங் கோலத்துக் கருமேக மெனஅழுக்குக் கந்தையுடன் எழுந்தருளி வருமேனி அருந்தவரைக் கண்டுமனம் மகிழ்ந்தெதிர்கொண் டுருமேவும் மயிர்ப்புளகம் உளவாகப் பணிந்தெழுந்தார்.
| [117] |
எய்துமவர் குறிப்பறிந்தே இன்மொழிகள் பலமொழிந்து செய்தவத்தீர் திருமேனி இளைத்திருந்த தென்னென்று கைதொழுது கந்தையினைத் தந்தருளும் கழுவஎன மைதிகழ்கண் டங்கரந்த மாதவத்தோர் அருள்செய்வார்.
| [118] |
இக்கந்தை அழுக்கேறி எடுக்கவொணா தெனினும்யான் மெய்க்கொண்ட குளிர்க்குடைந்து விடமாட்டேன் மேல்கடற்பால் அக்குன்றம் வெங்கதிரோன் அணைவதன்முன் தருவீரேல் கைக்கொண்டு போய்ஒலித்துக் கொடுவாருங் கடிதென்றார்.
| [119] |
தந்தருளும் இக்கந்தை தாழாதே ஒலித்துமக்கின் றந்திபடு வதன்முன்னம் தருகின்றேன் எனஅவரும் கந்தையிது ஒலித்துணக்கிக் கடிதின்றே தாரீரேல் இந்தவுடற் கிடர்செய்தீர் என்றுகொடுத் தேகினார்.
| [120] |
குறித்தபொழு தேயொலித்துக் கொடுப்பதற்குக் கொடுபோந்து வெறித்தடநீர்த் துறையின்கண் மாசெறிந்து மிகப்புழுக்கிப் பிறித்தொலிக்கப் புகுமளவில் பெரும்பகல்போய்ப் பின்பகலாய் மறிக்கரத்தார் திருவருளால் மழையெழுந்து பொழிந்திடுமால்.
| [121] |
திசைமயங்க வெளியடைத்த செறிமுகிலின் குழாமிடைந்து மிசைசொரியும் புனல்தாரை விழிநுழையா வகைமிடைய அசைவுடைய மனத்தன்பர் அறிவுமறந் தருந்தவர்பால் இசைவுநினைந் தழிந்தினியான் என்செய்கேன் எனநின்றார்.
| [122] |
ஓவாதே பொழியுமழை ஒருகால்விட் டொழியுமெனக் காவாலி திருத்தொண்டர் தனிநின்றார் விடக்காணார் மேவார்போல் கங்குல்வர மெய்குளிரும் விழுத்தவர்பால் ஆஆ என் குற்றேவல் அழிந்தவா எனவிழுந்தார்.
| [123] |
விழுந்தமழை ஒழியாது மெய்த்தவர்சொல் லியஎல்லை கழிந்ததுமுன் பொலித்துமனைக் காற்றேற்க அறிந்திலேன் செழுந்தவர்தந் திருமேனி குளிர்காணுந் தீங்கிழைத்த தொழும்பனேற் கினியிதுவே செயலென்று துணிந்தெழுவார்.
| [124] |
கந்தைபுடைத் திடஎற்றுங் கற்பாறை மிசைத்தலையைச் சிந்தவெடுத் தெற்றுவன்என் றணைந்துசெழும் பாறைமிசைத் தந்தலையைப் புடைத்தெற்ற அப்பாறை தன்மருங்கு வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை.
| [125] |
வானிறைந்த புனல்மழைபோய் மலர்மழையாய் இடமருங்கு தேனிறைந்த மலரிதழித் திருமுடியார் பொருவிடையின் மேனிறைந்த துணைவியொடும் வெளிநின்றார் மெய்த்தொண்டர் தானிறைந்த அன்புருகக் கைதொழுது தனிநின்றார்.
| [126] |
முன்னவரை நேர்நோக்கி முக்கண்ணர் மூவுலகும் நின்னிலைமை அறிவித்தோம் நீயும்இனி நீடியநம் மன்னுலகு பிரியாது வைகுவாய் எனஅருளி அந்நிலையே எழுந்தருளி அணிஏகாம் பரம்அணைந்தார்.
| [127] |
சீர்நிலவு திருக்குறிப்புத் தொண்டர்திருத் தொழில்போற்றிப் பார்குலவத் தந்தைதாள் அறஎறிந்தார் பரிசுரைக்கேன் பேரருளின் மெய்த்தொண்டர் பித்தனெனப் பிதற்றுதலால் ஆருலகில் இதனுண்மை அறிந்துரைக்க இசைந்தெழுவார்.
| [128] |
Back to Top
சேக்கிழார் மும்மையால் உலகாண்ட சருக்கம்
12.200  
சண்டேசுர நாயனார் புராணம்
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பூந்தண் பொன்னி எந்நாளும் பொய்யா தளிக்கும் புனல்நாட்டு வாய்ந்த மண்ணித் தென்கரையில் மன்ன முன்னாள் வரைகிழிய ஏந்தும் அயில்வேல் நிலைகாட்டி இமையோர் இகல்வெம் பகைகடக்கும் சேந்தன் அளித்த திருமறையோர் மூதூர் செல்வச் சேய்ஞலூர்.
| [1] |
செம்மை வெண்ணீற் றொருமையினார் இரண்டு பிறப்பின் சிறப்பினார் மும்மைத் தழலோம் பியநெறியார் நான்கு வேதம் முறைபயின்றார் தம்மை ஐந்து புலனும்பின் செல்லுந் தகையார் அறுதொழிலின் மெய்ம்மை யொழுக்கம் ஏழுலகும் போற்றும் மறையோர் விளங்குவது.
| [2] |
கோதில் மான்தோல் புரிமுந்நூல் குலவும் மார்பில் குழைக்குடுமி ஓது கிடைசூழ் சிறுவர்களும் உதவும் பெருமை ஆசானும் போதின் விளங்குந் தாரகையும் மதியும் போலப் புணர்மடங்கள் மீது முழங்கு முகிலொதுங்க வேத ஒலிகள் முழங்குவன.
| [3] |
யாகம் நிலவும் சாலைதொறும் மறையோர் ஈந்த அவியுணவின் பாகம் நுகர வருமாலும் அயனும் ஊரும் படர்சிறைப்புள் மாகம் இகந்து வந்திருக்கும் சேக்கை யெனவும் வானவர்கோன் நாகம் அணையுங் கந்தெனவும் நாட்டும் யூப ஈட்டமுள.
| [4] |
தீம்பால் ஒழுகப் பொழுதுதொறும் ஓம தேனுச் செல்வனவும் தாம்பா டியசா மங்கணிப்போர் சமிதை யிடக்கொண் டணைவனவும் பூம்பா சடைநீர்த் தடம்மூழ்கி மறையோர் மகளிர் புகுவனவும் ஆம்பான் மையினில் விளங்குவன அணிநீள் மறுகு பலவுமுள.
| [5] |
வாழ்பொற் பதிமற் றதன்மருங்கு மண்ணித் திரைகள் வயல்வரம்பின் தாழ்வில் தரளஞ் சொரிகுலைப்பால் சமைத்த யாகத் தடஞ்சாலை சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்தேறும் வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள்.
| [6] |
மடையில் கழுநீர் செழுநீர்சூழ் வயலில் சாலிக் கதிர்க்கற்றை புடையில் சுரும்பு மிடைகமுகு புனலில் பரம்பு பூம்பாளை அடையில் பயிலுந் தாமரைநீள் அலரில் துயிலும் கயல்கள்வழி நடையில் படர்மென் கொடிமௌவல் நனையில் திகழுஞ் சினைக்காஞ்சி.
| [7] |
சென்னி அபயன் குலோத்துங்கச் சோழன் தில்லைத் திருவெல்லை பொன்னின் மயமாக் கியவளவர் போரே றென்றும் புவிகாக்கும் மன்னர் பெருமான் அநபாயன் வருந்தொல் மரபின் முடிசூட்டுந் தன்மை நிலவு பதிஐந்தின் ஒன்றாய் விளங்குந் தகைத்தவ்வூர்.
| [8] |
பண்ணின் பயனாம் நல்லிசையும் பாலின் பயனாம் இன்சுவையும் கண்ணின் பயனாம் பெருகொளியும் கருத்தின் பயனாம் எழுத்தஞ்சும் விண்ணின் பயனாம் பொழிமழையும் வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின் பெருமை வரம்புடைத்தோ.
| [9] |
பெருமை பிறங்கும் அப்பதியின் மறையோர் தம்முள் பெருமனைவாழ் தருமம் நிலவு காசிபகோத் திரத்துத் தலைமை சால்மரபில் அருமை மணியும் அளித்ததுவே நஞ்சும் அளிக்கும் அரவுபோல் இருமை வினைக்கும் ஒருவடிவாம் எச்ச தத்தன் உளனானான்.
| [10] |
மற்றை மறையோன் திருமனைவி வாய்ந்த மரபின் வந்துதித்தாள் சுற்றம் விரும்பும் இல்வாழ்க்கைத் தொழிலாள் உலகில் துணைப்புதல்வற் பெற்று விளங்குந் தவஞ்செய்தாள் பெறும்பே றெல்லைப் பயன்பெறுவாள் பற்றை யெறியும் பற்றுவரச் சார்பா யுள்ள பவித்திரையாம்.
| [11] |
நன்றி புரியும் அவர்தம்பால் நன்மை மறையின் துறைவிளங்க என்றும் மறையோர் குலம்பெருக ஏழு புவனங் களும்உய்ய மன்றில் நடஞ்செய் பவர்சைவ வாய்மை வளர மாதவத்தோர் வென்றி விளங்க வந்துதயம் செய்தார் விசார சருமனார்.
| [12] |
ஐந்து வருடம் அவர்க்கணைய அங்கம் ஆறும் உடன்நிறைந்த சந்த மறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை யறிவின் தொடர்ச்சியினால் முகைக்கும் மலரின் வாசம்போல் சிந்தை மலர உடன்மலரும் செவ்வி யுணர்வு சிறந்ததால்.
| [13] |
நிகழும் முறைமை ஆண்டேழும் நிரம்பும் பருவம் வந்தெய்தப் புகழும் பெருமை உபநயனப் பொருவில் சடங்கு முடித்தறிவின் இகழு நெறிய அல்லாத எல்லாம் இயைந்த வெனினும்தம் திகழு மரபின் ஓதுவிக்கும் செய்கை பயந்தார் செய்வித்தார்.
| [14] |
குலவு மறையும் பலகலையும் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த நிலவும் உணர்வின் திறங்கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக்கொண்ட செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார்.
| [15] |
நடமே புரியும் சேவடியார் நம்மை உடையார் எனும்மெய்ம்மை உடனே தோன்றும் உணர்வின்கண் ஒழியா தூறும் வழியன்பின் கடனே இயல்பாய் முயற்றிவருங் காதல் மேன்மேல் எழுங்கருத்தின் திடநேர் நிற்குஞ் செம்மலார் திகழு நாளில் ஆங்கொருநாள்.
| [16] |
ஓது கிடையின் உடன்போவார் ஊர்ஆன் நிரையின் உடன்புக்க போது மற்றங் கொருபுனிற்றா போற்றும் அவன்மேன் மருப்போச்ச யாது மொன்றுங் கூசாதே யெடுத்த கோல்கொண் டவன்புடைப்ப மீது சென்று மிகும்பரிவால் வெகுண்டு விலக்கி மெய்யுணர்ந்து.
| [17] |
பாவுங் கலைகள் ஆகமநூல் பரப்பின் தொகுதிப் பான்மையினால் மேவும் பெருமை அருமறைகள் மூல மாக விளங்குலகில் யாவுந் தெளிந்த பொருளின்நிலையே எய்த உணர்ந்த உள்ளத்தால் ஆவின் பெருமை உள்ளபடி அறிந்தார் ஆயற் கருள்செய்வார்.
| [18] |
தங்கும் அகில யோனிகட்கும் மேலாம் பெருமைத் தகைமையன பொங்கு புனித தீர்த்தங்கள் எல்லா மென்றும் பொருந்துவன துங்க அமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத அங்கம் அனைத்துந் தாமுடைய அல்ல வோநல் ஆனினங்கள்.
| [19] |
ஆய சிறப்பி னால்பெற்ற அன்றே மன்றுள் நடம்புரியும் நாய னார்க்கு வளர்மதியும் நதியும் நகுவெண் டலைத்தொடையும் மேய வேணித் திருமுடிமேல் விரும்பி யாடி அருளுதற்குத் தூய திருமஞ் சனம்ஐந்தும் அளிக்கும் உரிமைச் சுரபிகள்தாம்.
| [20] |
சீலம் உடைய கோக்குலங்கள் சிறக்குந் தகைமைத் தேவருடன் கால முழுதும் உலகனைத்தும் காக்கும் முதற்கா ரணராகும் நீல கண்டர் செய்யசடை நிருத்தர் சாத்து நீறுதரும் மூலம் அவதா ரஞ்செய்யும் மூர்த்தம் என்றால் முடிவென்னோ.
| [21] |
உள்ளுந் தகைமை இனிப்பிறவே றுளவே உழைமான் மறிக்கன்று துள்ளுங் கரத்தார் அணிபணியின் சுடர்சூழ் மணிகள் சுரநதிநீர் தெள்ளுஞ் சடையார் தேவர்கள்தம் பிராட்டி யுடனே சேரமிசைக் கொள்ளுஞ் சினமால் விடைத்தேவர் குலமன் றோஇச் சுரபிகுலம்.
| [22] |
என்றின் னனவே பலவும்நினைந் திதத்தின் வழியே மேய்த்திந்தக் கன்று பயில்ஆன் நிரைகாக்கும் இதன்மே லில்லை கடனிதுவே மன்றுள் ஆடுஞ் சேவடிகள் வழுத்து நெறியா வதும்என்று நின்ற ஆயன் தனைநோக்கி நிரைமேய்ப் பொழிக நீயென்பார்.
| [23] |
யானே இனியிந் நிரைமேய்ப்பன் என்றார் அஞ்சி இடைமகனும் தானேர் இறைஞ்சி விட்டகன்றான் தாமும் மறையோர் இசைவினால் ஆனே நெருங்கும் பேராயம் அளிப்பா ராகிப் பைங்கூழ்க்கு வானே யென்ன நிரைகாக்க வந்தார் தெய்வ மறைச்சிறுவர்.
| [24] |
கோலும் கயிறும் கொண்டுகுழைக் குடுமி அலையக் குலவுமான் தோலும் நூலுஞ் சிறுமார்பில் துவள அரைக்கோ வணஞ்சுடரப் பாலும் பயனும் பெருகவரும் பசுக்கள் மேய்க்கும் பான்மையினால் சாலும் புல்லின் அவைவேண்டுந் தனையும் மிசையுந் தலைச்சென்று.
| [25] |
பதவு காலங் களின்மேய்த்தும் பறித்தும் அளித்தும் பரிவகற்றி இதமுண் துறையுள் நற்றண்ணீர் ஊட்டி அச்சம் எதிர்நீக்கி அதர்நல் லனமுன் செலநீழல் அமர்வித் தமுத மதுரப்பால் உதவும் பொழுது பிழையாமல் உடையோர் இல்லந் தொறுமுய்த்தார்.
| [26] |
மண்ணிக் கரையின் வளர்புறவின் மாடும் படுகர் மருங்கினிலும் தண்ணித் திலநீர் மருதத்தண் டலைசூழ் குலையின் சார்பினிலும் எண்ணிற் பெருகு நிரைமேய்த்துச் சமிதை யுடன்மேல் எரிகொண்டு நண்ணிக் கங்குல் முன்புகுதும் நன்னாள் பலவாம் அந்நாளில்.
| [27] |
ஆய நிரையின் குலமெல்லாம் அழகின் விளங்கி மிகப்பல்கி மேய இனிய புல்லுணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி எய்த இரவும் நண்பகலும் தூய தீம்பால் மடிபெருகிச் சொரிய முலைகள் சுரந்தனவால்.
| [28] |
பூணுந் தொழில்வேள் விச்சடங்கு புரிய ஓம தேனுக்கள் காணும் பொலிவில் முன்னையினும் அனேக மடங்கு கறப்பனவாய்ப் பேணுந் தகுதி அன்பால்இப் பிரம சாரி மேய்த்ததற்பின் மாணுந் திறத்த வானவென மறையோர் எல்லாம் மனமகிழ்ந்தார்.
| [29] |
அனைத்துத் திறத்தும் ஆனினங்கள் அணைந்த மகிழ்ச்சி அளவின்றி மனைக்கண் கன்று பிரிந்தாலும் மருவுஞ் சிறிய மறைக்கன்று தனைக்கண் டருகு சார்ந்துருகித் தாயாந் தன்மை நிலையினவாய்க் கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவா மேபால் பொழிந்தனவால்.
| [30] |
தம்மை அணைந்த ஆன்முலைப்பால் தாமே பொழியக் கண்டுவந்து செம்மை நெறியே உறுமனத்தில் திருமஞ் சனமாங் குறிப்புணர்ந்தே எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்ததனில் மெய்ம்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விளைந்தெழலும்.
| [31] |
அங்கண் முன்னை அர்ச்சனையின் அளவின் தொடர்ச்சி விளையாட்டாப் பொங்கும் அன்பால் மண்ணிமணற் புளினக் குறையில் ஆத்தியின்கீழ்ச் செங்கண் விடையார் திருமேனி மணலால் ஆக்கிச் சிவாலயமும் துங்க நீடு கோபுரமுஞ் சுற்றா லயமும் வகுத்தமைத்தார்.
| [32] |
ஆத்தி மலரும் செழுந்தளிரும் முதலா அருகு வளர்புறவில் பூத்த மலர்கள் தாந்தெரிந்து புனிதர் சடிலத் திருமுடிமேல் சாத்த லாகுந் திருப்பள்ளித் தாமம் பலவுந் தாங்கொய்து கோத்த இலைப்பூங் கூடையினில் கொணர்ந்து மணந்தங் கிடவைத்தார்.
| [33] |
நல்ல நவகும் பங்கள்பெற நாடிக் கொண்டு நாணற்பூங் கொல்லை இடத்துங் குறைமறைவும் மேவுங் கோக்கள் உடன்கூட ஒல்லை யணைந்து பாலாக்கள் ஒன்றுக் கொருகா லாகவெதிர் செல்ல அவையுங் கனைத்துமுலை தீண்டச் செழும்பால் பொழிந்தனவால்.
| [34] |
கொண்டு மடுத்த குடம்நிறையக் கொணர்ந்து விரும்புங் கொள்கையினால் அண்டர் பெருமான் வெண்மணல்ஆ லயத்துள் அவைமுன் தாபித்து வண்டு மருவுந் திருப்பள்ளித் தாமங் கொண்டு வரன்முறையே பண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திருமஞ் சனமாட்டி.
| [35] |
மீள மீள இவ்வண்ணம் வெண்பால் சொரிமஞ் சனமாட்ட ஆள உடையார் தம்முடைய அன்ப ரன்பின் பாலுளதாய் மூள அமர்ந்த நயப்பாடு முதிர்ந்த பற்று முற்றச்சூழ் கோளம் அதனில் உள்நிறைந்து குறித்த பூசை கொளநின்றார்.
| [36] |
பெருமை பிறங்குஞ் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளை யார்தம் உள்ளத்தில் ஒருமை நினைவால் உம்பர்பிரான் உவக்கும் பூசை உறுப்பான திருமஞ் சனமே முதலவற்றில் தேடா தனஅன் பினில்நிரப்பி வரும்அந் நெறியே அர்ச்சனைசெய் தருளி வணங்கி மகிழ்கின்றார்.
| [37] |
இறையோன் அடிக்கீழ் மறையவனார் எடுத்துத் திருமஞ் சனமாட்டும் நிறைபூ சனைக்குக் குடங்கள்பால் நிரம்பச் சொரிந்து நிரைக்குலங்கள் குறைபா டின்றி மடிபெருகக் குவிந்த முலைப்பால் குறைவின்றி மறையோர் மனையின் முன்புதரும் வளங்கள் பொலிய வைகுமால்.
| [38] |
செயலிப் படியே பலநாளும் சிறந்த பூசை செய்வதற்கு முயல்வுற் றதுவே திருவிளையாட் டாக முந்நூல் அணிமார்பர் இயல்பில் புரியும் மற்றிதனைக் கண்டித் திறத்தை யறியாத அயல்மற் றொருவன் அப்பதியில் அந்த ணாளர்க் கறிவித்தான்.
| [39] |
அச்சொற் கேட்ட அருமறையோர் ஆயன் அறியான் என்றவற்றின் இச்சை வழியே யான்மேய்ப்பேன் என்றெம் பசுக்கள் தமைக்கறந்து பொச்சம் ஒழுகு மாணவகன் பொல்லாங் குரைக்க அவன்தாதை எச்ச தத்தன் தனையழைமின் என்றார் அவையில் இருந்தார்கள்.
| [40] |
ஆங்கு மருங்கு நின்றார்கள் அவ்வந் தணன்தன் திருமனையின் பாங்கு சென்று மற்றவனை அழைத்துக் கொண்டு வரப்பகர்ந்த ஓங்கு சபையோர் அவனைப்பார்த் தூர்ஆன் நிரைமேய்த் துன்மகன்செய் தீங்கு தன்னைக் கேளென்று புகுந்த பரிசு செப்புவார்.
| [41] |
அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்க ளானவெலாம் சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல் கந்தம் மலிபூம் புனல்மண்ணி மணலில் கறந்து பாலுகுத்து வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய்மொழிந்தார்.
| [42] |
மறையோர் மொழியக் கேட்டஞ்சிச் சிறுமா ணவகன் செய்தஇது இறையும் நான்முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்ததனை நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்களெனக் குறைகொண் டிறைஞ்சி இனிப்புகுதில் குற்றம் எனதே யாம்என்றான்.
| [43] |
அந்த ணாளர் தமைவிடைகொண் டந்தி தொழுது மனைபுகுந்து வந்த பழியொன் றெனநினைந்தே மகனார் தமக்கு வாய்நேரான் இந்த நிலைமை அறிவேனென் றிரவு கழிந்து நிரைமேய்க்க மைந்த னார்தாம் போயினபின் மறைந்து சென்றான் மறைமுதியோன்.
| [44] |
சென்ற மறையோன் திருமகனார் சிறந்த ஊர்ஆன் நிரைகொடுபோய் மன்றல் மருவும் புறவின்கண் மேய்ப்பார் மண்ணி மணற்குறையில் அன்று திரளக் கொடுசென்ற அதனை யறிந்து மறைந்தப்பால் நின்ற குரவின் மிசையேறி நிகழ்வ தறிய ஒளித்திருந்தான்.
| [45] |
அன்பு புரியும் பிரமசா ரிகளும் மூழ்கி அரனார்க்கு முன்பு போல மணற்கோயில் ஆக்கி முகைமென் மலர்கொய்து பின்பு வரும்ஆன் முலைபொழிபால் பெருகுங் குடங்கள் பேணுமிடந் தன்பாற் கொணர்ந்து தாபித்துப் பிறவும் வேண்டு வனசமைத்தார்.
| [46] |
நின்ற விதியின் விளையாட்டால் நிறைந்த அரும்பூ சனைதொடங்கி ஒன்றும் உள்ளத் துண்மையினால் உடைய நாதன் திருமுடிமேல் மன்றல் விரவுந் திருப்பள்ளித் தாமம் சாத்தி மஞ்சனமா நன்று நிறைதீம் பாற்குடங்கள் எடுத்து நயப்புற் றாட்டுதலும்.
| [47] |
பரவ மேன்மேல் எழும்பரிவும் பழைய பான்மை மிகும்பண்பும் விரவ மேதக் கவர்தம்பால் மேவும் பெருமை வெளிப்படுப்பான் அரவம் மேவுஞ் சடைமுடியார் அருளாம் என்ன அறிவழிந்து குரவு மேவும் முதுமறையோன் கோபம் மேவும் படிகண்டான்.
| [48] |
கண்ட போதே விரைந்திழிந்து கடிது சென்று கைத்தண்டு கொண்டு மகனார் திருமுதுகில் புடைத்துக் கொடிதாம் மொழிகூறத் தொண்டு புரியுஞ் சிறியபெருந் தோன்ற லார்தம் பெருமான்மேல் மண்டு காதல் அருச்சனையில் வைத்தார் மற்றொன் றறிந்திலரால்.
| [49] |
மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க வேறுணரார் பாலார் திருமஞ் சனமாட்டும் பணியிற் சலியா ததுகண்டு மாலா மறையோன் மிகச்செயிர்த்து வைத்த திருமஞ் சனக்குடப்பால் காலா லிடறிச் சிந்தினான் கையாற் கடைமைத் தலைநின்றான்.
| [50] |
சிந்தும் பொழுதில் அதுநோக்கும் சிறுவர் இறையில் தீயோனைத் தந்தை யெனவே அறிந்தவன்தன் தாள்கள் சிந்துந் தகுதியினால் முந்தை மருங்கு கிடந்தகோல் எடுத்தார்க் கதுவே முறைமையினால் வந்து மழுவா யிடஎறிந்தார் மண்மேல் வீழ்ந்தான் மறையோனும்.
| [51] |
எறிந்த அதுவே அர்ச்சனையில் இடையூ றகற்றும் படையாக மறிந்த தாதை இருதாளும் துணித்த மைந்தர் பூசனையில் அறிந்த இடையூ றகற்றினராய் முன்போல் அருச்சித் திடப்புகலும் செறிந்த சடைநீள் முடியாரும் தேவி யோடும் விடையேறி.
| [52] |
பூத கணங்கள் புடைசூழப் புராண முனிவர் புத்தேளிர் வேத மொழிகள் எடுத்தேத்த விமல மூர்த்தி திருவுள்ளம் காதல் கூர வெளிப்படலும் கண்டு தொழுது மனங்களித்துப் பாத மலர்கள் மேல்விழுந்தார் பத்தி முதிர்ந்த பாலகனார்.
| [53] |
தொடுத்த இதழி சூழ்சடையார் துணைத்தாள் நிழற்கீழ் விழுந்தவரை எடுத்து நோக்கி நம்பொருட்டால் ஈன்ற தாதை விழவெறிந்தாய் அடுத்த தாதை இனியுனக்கு நாம்என் றருள்செய் தணைத்தருளி மடுத்த கருணை யால்தடவி உச்சி மோந்து மகிழ்ந்தருள.
| [54] |
செங்கண் விடையார் திருமலர்க்கை தீண்டப் பெற்ற சிறுவனார் அங்கண் மாயை யாக்கையின்மேல் அளவின் றுயர்ந்த சிவமயமாய்ப் பொங்கி யெழுந்த திருவருளின் மூழ்கிப் பூமேல் அயன்முதலாம் துங்க அமரர் துதிசெய்யச் சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
| [55] |
அண்டர் பிரானும் தொண்டர்தமக் கதிபன் ஆக்கி அனைத்துநாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடு வனவும் உனக்காகச் சண்டீ சனுமாம் பதந்தந்தோம் என்றங் கவர்பொற் றடமுடிக்குத் துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச் சூட்டினார்.
| [56] |
எல்லா உலகும் ஆர்ப்பெடுப்ப எங்கும் மலர்மா ரிகள்பொழியப் பல்லா யிரவர் கணநாதர் பாடி ஆடிக் களிபயிலச் சொல்லார் மறைகள் துதிசெய்யச் சூழ்பல் லியங்கள் எழச்சைவ நல்லா றோங்க நாயகமாம் நங்கள் பெருமான் தொழுதணைந்தார்.
| [57] |
ஞாலம் அறியப் பிழைபுரிந்து நம்பர் அருளால் நான்மறையின் சீலந் திகழுஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்தந் திருக்கையில் கோல மழுவால் ஏறுண்டு குற்றம் நீங்கிச் சுற்றமுடன் மூல முதல்வர் சிவலோகம் எய்தப் பெற்றான் முதுமறையோன்.
| [58] |
வந்து மிகைசெய் தாதைதாள் மழுவால் துணித்த மறைச்சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆயினார் இந்த நிலைமை அறிந்தாரார் ஈறி லாதார் தமக்கன்பு தந்த அடியார் செய்தனவே தவமா மன்றோ சாற்றுங்கால்.
| [59] |
நேசம் நிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத் தீசன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழவெடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்
| [60] |